சென்னையில் கார் மீது மரம் விழுந்து வங்கி மேலாளர் பலி.. மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளம் தான் காரணமா..?

By Thanalakshmi VFirst Published Jun 25, 2022, 12:18 PM IST
Highlights

சென்னை கேகே நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்ததில், காரில் இருந்த பெண் வங்கி மேலாளர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காரில் இருந்த 2 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை கே.கே நகர் லட்சுமணசாமி சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் மேலாளராக வாணி கபிலன் பணியாற்றி வந்துள்ளார். இவர் போரூர் மங்கலம் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மேலும் இவர் பல்வேறு கவிதை தொகுப்புகளை எழுதி , புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்தவுடன் தனது காரில் பின்புறத்தில் அமர்ந்துகொண்டு, அவரது சகோதரி எழிலரசியுடன் வீட்டிற்கு பயணம் செய்துள்ளார். இதனிடையே கார் , கே.கே நகர் லட்சுமண சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக சென்றுக் கொண்டிருந்தது. அப்போது கர்நாடக வங்கி அருகே வந்த போது திடீரென அங்கிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து காரின் பின்பக்கம் விழுந்துள்ளது. இதில் காரின் பின்பக்கம் முழுவதும் நொறுங்கி சேதமானது. 

மேலும் காரின் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த வங்கி மேலாளர் வாணி கபிலன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தங்கை எழிலரசி மற்றும் கார் ஓட்டுநர் கார்த்திக் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களுக்கு கே.கே.நகர் அரசு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், வேரோடு சாய்ந்து விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தினர்.

மேலும் கே.கே.நகர் போலீசார், பலியான வங்கி மேலாளார் வாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த இடத்தில் மழை நீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.  இதனால் தான் மரம் சாய்ந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மழை நீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டும் போது மரத்தை வெட்டி இருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அந்த பாதையில் போக்குவரத்தை தடை செய்திருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.  ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது.  எனவே அது தொடர்பாக பள்ளம் தோண்டிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெவித்தனர்.

மேலும் படிக்க:பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.. வரும் 27 ல் வெளியீடு.. முழு தகவல்.

click me!