46 நாட்கள் கொண்டாட்டம் ! இன்றுடன் நிறைவு பெறுகிறது அத்திவரதர் தரிசனம் !

By Selvanayagam PFirst Published Aug 16, 2019, 7:06 AM IST
Highlights

காஞ்சீபுரத்தில் கடந்த  46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து நாளை அத்தி வரதருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் குளத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது.
 

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த மாதம் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்றகோலத்தில் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

46-வது நாளான நேற்று அத்திவரதர் ஏலக்காய் மாலை, துளசி மாலை, ரோஜாப்பூ மாலை, தாமரை பூமாலை என்று மலர் அலங்காரத்தில் வெண்பட்டு அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தனிவரிசையில் சக்கர நாற்காலியில் வந்து அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். ஆடி கருடசேவையையொட்டி நேற்று நண்பகல் 12 மணியுடன் அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. வரிசையில் காத்திருந்தவர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இரவு 8 மணிக்கு பிறகு மீண்டும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காத்திருக்கும் பக்தர்கள் நள்ளிரவு 2 மணிவரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அத்திவரதர் தரிசனத்தையொட்டி காஞ்சீபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. விடுதிகள் நிரம்பி காணப்பட்டது. வெளியூரில் இருந்த வந்த பக்தர்கள் தங்க இடம் கிடைக்காமல் அவதிக்கு உள்ளானார்கள். கடந்த 46 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் தரிசனம் இன்றுடன்  நிறைவு பெறுகிறது. 

இன்று அத்திவரதரை முக்கிய நபர்களுக்கான வரிசையில் நின்றோ, டோனர் பாஸ் மூலமாகவோ தரிசிக்க முடியாது. பொது தரிசன வரிசையில் நின்று மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அத்திவரதர் தரிசனம் நிறைவுபெறுவதையடுத்து நாளை) சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

click me!