பொறுப்பா நடந்துக்கனும்! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ரஜினிக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் வைத்த குட்டு

By Ganesh AFirst Published Oct 19, 2022, 7:37 AM IST
Highlights

சமூக விரோதிகளால் தான் தூத்துக்குடியில் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி ஆணையத்தில் தெரிவித்ததாக அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 

தூத்துக்குடியில் உள்ள ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் போது கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட முயன்றபோது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த . அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த போராட்டத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்றும், தனக்கு நன்றாக தெரியும் என்றும் உறுதிபட பேசி இருந்தார்.

இதையும் படியுங்கள்... நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட்.. எடப்பாடி சொன்னது பொய்.! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திருப்பம்

அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் நடிகர் ரஜினிகாந்திடமும் விசாரணை நடத்தியது. சுமார் 4 ஆண்டுகளாக விசாரணை நடத்திய இந்த ஒருநபர் ஆணையம் அதுகுறித்த விவரங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தது. இதையடுத்து நேற்று சட்டப்பேரவையில் இதுகுறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்தது. 

அந்த அறிக்கையில் “சமூக விரோதிகளால் தான் தூத்துக்குடியில் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி ஆணையத்தில் தெரிவித்தார். இவர் போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். தங்களது பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்” என அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையும் படியுங்கள்... தூத்துக்குடி போராட்டக்காரர்களை வேட்டையாடிய காவலர் சுடலைக்கண்ணு..! 17 ரவுண்ட் சுட்டது ஏன்.? அறிக்கையில் தகவல்

click me!