மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் - முதல்வர் ஜெ. உத்தரவு

Asianet News Tamil  
Published : Nov 23, 2016, 12:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் - முதல்வர் ஜெ. உத்தரவு

சுருக்கம்

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் கடன் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டப்படி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வங்கி என்ற வரன்முறைக்குள் வரவில்லை என்பதால், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், விவசாயிகளிடம் இருந்து பெற இயலாத நிலை ஏற்பட்டது.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க இயலாத நிலை ஏற்பட்டு, அவை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. செல்லாத நோட்டுகளை மத்தியக் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக மாற்றம் செய்வதும் தடை செய்யப்பட்டது.

இதுபோன்ற இன்னல்களில் சிக்கியுள்ள விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையிலும், பயிர்க் கடன் பெற்று விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ளும் வகையிலும் ஒரு முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தற்போதுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி விவசாய உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து பயிர்க்கடன்களை அனுமதிக்கும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அளவில் பயிர்க்கடன் அனுமதிப்பதில் உள்ள அதிகாரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது.

விவசாயிகளுக்கு விவசாயக் கடனின் ரொக்கப் பகுதியை வழங்க ஏதுவாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் இணைக்கப்பட்டுள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளையில் பயிர்க்கடன் பெறும் விவசாய உறுப்பினர்களின் பெயரில் ‘‘உங்கள் வாடிக்கையாளரை அறிதல்’’ விதிமுறைகளைக் கடைபிடித்து கணக்குகள் தொடங்கப்படும்.

பயிர்க் கடன் பெறும் ஒவ்வொரு கடன்தாரருக்கும் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் கணக்கு தொடங்கப்படும். மேலும், இக்கணக்குகள் மூலம் விவசாயிகள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் இதர வாடிக்கையாளருக்கு இணையாக மின்னணுப் பரிமாற்றச் சேவைகள், காசோலை மற்றும் வரைவோலை வசதிகள் ஆகியவற்றை பெற இயலும்.

இப்பணி தொடர்பாக ஏற்படும் பணிப்பளுவைச் சமாளிக்க ஏதுவாக மத்தியக் கூட்டுறவு வங்கிகள் ஓய்வு பெற்ற பணியாளர்களை தற்காலிகமாக ஈடுபடுத்திக் கொள்ளும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க் கடன் அனுமதிக்கப்பட்ட உடன் கடன் தொகையின் ரொக்கப் பகுதியை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் தொடங்கப்பட்டுள்ள விவசாய உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஏதுவாக தொடர்புடைய மத்திய கூட்டுறவு வங்கிக்கு பற்றுச்சீட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தால் அனுப்பி வைக்கப்படும்.

விவசாயிகள் தொடர்புடைய மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் ரொக்கப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். விவசாய உறுப்பினர் கணக்கில் வரவு வைக்கப்பட்ட கடன் தொகையில், விவசாயி ஒரு வாரத்திற்கு ரூ.25000 ரொக்கமாக வங்கிக் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களான உரம், விதைகள் ஆகியவைக்கான தொகையை ரொக்கமாக செலுத்த வலியுறுத்தாமல், அவர்களுக்கு பயிர்க்கடன் வழங்கும்போது அக்கணக்கில் பற்று வைத்து, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வழங்கும். அதாவது, ரொக்கமாகப் பணம் செலுத்தாமலேயே விவசாயிகள் இடுபொருட்களைப் பெற இயலும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயத்திற்கு தேவையான உழவு எந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்களை சங்கத்திலுள்ள வேளாண்மை சேவை மையம் மூலமாக வாடகைக்கு விடும்போது வாடகைத் தொகையை ரொக்கமாக செலுத்த வலியுறுத்தாது.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை பெறும் பட்சத்தில் வேளாண் பொறியியல் துறையிடமிருந்தோ அல்லது வேறு வழிவகைகளிலோ வாடகைக்குப் பெற்று விவசாயிகளுக்கு வழங்கும்.

இதற்கான செலவினத் தொகையினை தொடர்புடைய விவசாயிகளின் பயிர்க்கடன் கணக்கில் பற்று வைத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மத்தியக் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்கும். அதாவது ரொக்கப்பணம் செலுத்தாமலேயே விவசாயிகள் எந்திரங்களை வாடகைக்குப் பெற இயலும்.

பயிர் காப்பீட்டு தொகையை விவசாயிகளின் பயிர்க்கடன் கணக்கில் பற்று வைத்து, தொடர்புடைய காப்பீடு நிறுவனத்திற்கு மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகள், 15.12.16 தேதிக்கு முன்னர் செலுத்திவிடும்.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க் கடன் பெறாத விவசாயிகள், வரைவோலை அல்லது ரொக்கமாக செலுத்தி தங்களுக்கு தேவையான உரம், இடுபொருட்கள் மற்றும் விவசாயப் பணிகளுக்கு தேவையான வேளாண் எந்திரங்களை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பல பெண்களிடம் தீராத விளையாட்டு பிள்ளையாக இருந்த மருமகன்.! விஷயம் தெரிந்த மாமனார்.. கதறும் மகள்.. நடந்தது என்ன?
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! பிப்ரவரி 15ம் தேதி முதல் தரமான சம்பவம்.. வானிலை மையம் சூப்பர் அப்டேட்!