மூடியை கழட்டிட்டு பாருங்க: மதுரை எம்.பி.யை கிண்டலடிக்க போய் கலாய் வாங்கிய அதிமுக வேட்பாளர்!

By Manikanda PrabuFirst Published Mar 29, 2024, 3:54 PM IST
Highlights

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனை கிண்டலத்த அதிமுக வேட்பாளரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல்வதிகள் நூதனமான முறையில் பிரசாரம் செய்து அனைவரது கனவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். கடந்த தேர்தல்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாத மத்திய பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் ஒற்றை செங்கலுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட தேர்தல் பிரசாரம் நாடும் முழுவதும் கவனம் ஈர்த்தது.

அதே யுக்தியை அவர் இந்த முறை கையாண்ட போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதனை விமர்சித்தார். இதற்கு உதயநிதி புகைப்படத்துடன் பதிலடி கொடுக்க, அதற்கு மறுநாள் எடப்பாடி பழனிசாமி, திமுக தொடர்பான வேறு ஒரு புகைப்படத்தை கையோடு கொண்டு வந்து உதயநிதியை விமர்சித்தார்.

இதுபோன்ற விமர்சனங்களாலும், நூதன பிரசாரங்களாலும் தமிழ்நாட்டு தேர்தல் பிரசாரக் களம் களைக்கட்டியுள்ளது. அந்த வகையில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனை கிண்டலத்த அதிமுக வேட்பாளரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் சிட்டிங் எம்.பி.யான கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் டாக்டர் சரவணனும், பாஜக சார்பில் பேராசிரியர் சீனிவாசனும் போட்டியிடுகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது: ஐ.நா சபை கருத்து!

இந்த நிலையில், தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், தனது கையில் பைனாகுலரை கொண்டு வந்து, சு.வெங்கடேசன் எம்.பி. செய்த பணிகளை பைனாகுலர் கொண்டு பார்ப்பதாகவும், ஒன்றும் தெரியவில்லை எனவும் விமர்சித்தார்.

ஆனால், பைனாகுலர் மூடியை திறக்காமலேயே அவர் பார்த்தார். இதனை சுட்டிக் காட்டி, பைனாகுலர் மூடியை திறக்காமல் பார்த்தால் எப்படி தெரியும்? திறந்து பாருங்கள் அப்போது தெரியும் என நெட்டிசன்கள் சரவணனை கலாய்த்து வருகின்றனர்.

click me!