DMK : கோவையில் திமுகவினருக்கும் காவல்துறைக்கும் மோதல்.. குண்டுக்கட்டாக பகுதி செயலாளரை தூக்கி எறிந்த போலீஸார்

By Ajmal KhanFirst Published Apr 19, 2024, 1:45 PM IST
Highlights

பூத் சிலிப் வழங்கும் இடத்தில் அதிக கூட்டம் கூடியதற்கு காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது  திமுக நிர்வாகி பாக்யராஜை குண்டுகட்டாக‌ தூக்கிச் சென்று காவல் துறையினர் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 

திமுக- போலீஸ் மோதல்

கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று காலை முதல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை பிஎன் புதூரில் உள்ள வாக்குச்சாவடி அருகே 200 மீட்டருக்கு  அப்பால் திமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.  அப்போது அவர்கள் தங்களது கட்சி சின்னத்தை வைத்திருந்தனர். இது தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் கட்சி சின்னத்தை மறைத்து வைத்தனர். தொடர்ந்து அங்கு போடப்பட்டிருந்த பந்தலை அகற்றுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் அங்கு இருந்த உதவி கமிஷனர் நவீன் குமாருக்கும், திமுக பகுதி செயலாளர் பாக்யராஜ் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திமுக பகுதி செயலாளரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்

இதில் உதவி கமிஷனர் நவீன் குமார் திமுக பகுதி செயலாளர் பாக்யராஜை தாக்கியதாக தெரிகிறது. மேலும் குண்டுக்கட்டாக போலீசார் திமுக பகுதி செயலாளரை தூக்கிச்சென்றனர். ஒரு கட்டத்தில் பாக்கியராஜை சாலையில் போட்டனர். இதில் பாக்கியராஜிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.  அதே நேரத்தில் போலீஸ் தரப்பில் கூறும் போது பகுதி செயலாளர் உதவி கமிஷனரில் சட்டையை பிடித்ததால் அவரை இழுத்துச் சென்றதாக கூறுகின்றனர்.

பாஜக நிர்வாகியிடம் இருந்து சிக்கிய பணம்...வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம் இல்லை- வானதி புது விளக்கம்

click me!