கன்டெய்னருடன் லாரியை கடத்தி தில்லாலங்கடி வாலிபர்கள் கைது – ரூ.1 கோடி மென்பொருட்கள் பறிமுதல்!

By manimegalai aFirst Published Sep 12, 2018, 4:46 PM IST
Highlights

ஸ்ரீபெரும்புதூர் அருகே மருந்து தயாரிக்கும் மூலப்பொருட்கள் என நினைத்து மென்பொருள் உதிரி பாகங்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, அதன் டிரைவரை கடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

ஸ்ரீபெரும்புதூர் அருகே மருந்து தயாரிக்கும் மூலப்பொருட்கள் என நினைத்து மென்பொருள் உதிரி பாகங்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, அதன் டிரைவரை கடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களுர் மத்திய சேமிப்பு கிடங்கில் இருந்து கடந்த 6ம் தேதி ரூ.1 கோடி மதிப்பிலான மென்பொருள் உதிரி பாகங்கள் ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி சென்னைக்கு புறப்பட்டது. லாரியை திருநெல்வேளியை சேர்ந்த அருள்மணி (52) என்பவர் ஓட்டினார். பெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் அருகே பிள்ளைச்சத்திரம் பகுதியில் இரவு 10 மணியளவில், சென்றபோது, டிரைவர் சாப்பிடுவதற்காக லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கினார். 

அப்போது அவரை நோக்கி 3 பைக்குகள் மற்றும் ஒரு காரில் வந்த 8 பேர், அருள்மணியை சரமாரியாக தாக்கி அவரை காரில் போட்டுகொண்டு லாரியை கடத்தினர்.இரவு முழுவதும் சுற்றிவிட்டு மறுநாள் காலை 7 மணியளவில், டிரைவர் அருள்மணியை குன்றத்தூர் அருகே 400அடி வெளிவட்ட சாலையில் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டனர்.

புகாரின்படி சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து, கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரியை தேடினர். அப்போது அந்த லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியை சோதனை செய்தபோது, லாரி ஆந்திரா நோக்கி சென்றது தெரிந்தது.
 
இதையடுத்து தனிப்படை போலீசார், ஆந்திரா சென்று பார்த்தபோது அந்த ஜிபிஎஸ் கருவி வேறு ஒரு லாரிக்கு மாற்றப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து தேடுதலை தீவிரப்படுத்திய போலீசார் கடைசியாக லாரி மாதவரத்தில் இருப்பதை நேற்று கண்டுபிடித்தனர். அங்குள்ள ஒரு குடோனில் லாரிக்கு பெயின்ட் மாற்றி இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதைதொடர்ந்து போலீசார், லாரியை கடத்திய மாதவரத்தை சேர்ந்த சம்சுதின் (28), வில்லிவாக்கம் கார்த்திக் (22), அலாவுதீன் (42), முகேஷ் (30), திருவொற்றியூர் சதிஷ்குமார் (22), திருவேற்காடு தாவுத்பாஷா (31), ஆகே நகர் சதாசிவம் (25), செய்யாறு அஜய் (எ) சிவகுமார் (34), ஆகியோரை கைது செய்தனர். 

விசாரணையில், மத்திய சேமிப்பு குடோனில் இருந்து அடிக்கடி மருந்து தயாரிக்கும் மூலப்பொருட்கள் கன்டெய்னர் லாரிகள் மூலம் சென்னை துறைமுகம் கொண்டு வரப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். அந்த லாரியை கடத்தினால் நிறைய பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் 8 பேரும் லாரியை கடத்தியதை ஒப்புகொண்டனர். மேலும், கடத்தலுக்கு மூலையாக செயல்பட்ட சம்சுதின் என்றும், மற்ற அனைவரும் கார் டிரைவர்கள் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து லாரி மற்றும் அதில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 8 பேரிடமும் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

click me!