
போதையின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்கள் தங்களின் நன்னெறியைத் தொலைத்துவிட்டு, இது போன்ற மிருகத்தனமான செயல்களில் ஈடுபடுவது சமூகச் சீரழிவிற்கு வழிவகுக்கிறது என தவெக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக தவெக ஐடிவிங் தனது எக்ஸ் தள பக்கத்தில்: விளாத்திகுளத்தின் அலறல் அடங்குமுன் அடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது. தமிழகத்தின் அமைதி மாவட்டமாக அறியப்படும் சேலத்தில், 66 வயது மூதாட்டி ஒருவரை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. தாயுள்ளம் கொண்ட ஒரு மூதாட்டிக்கு நேர்ந்த இந்த இழிவான செயல், ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைகுனியச் செய்துள்ளது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளின் மனமே திமுக அரசின் ஐந்தாண்டு அடையாளம்.
"விடியல் தருவோம்" என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று முதியோர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற ஒரு இருண்ட சூழலை உருவாக்கியுள்ளனர். பட்டப்பகலில் வழிப்பறி, தொடர் கொலைகள் எனத் தொடங்கி, தற்போது 60 வயதைக் கடந்த மூதாட்டிகளைக் கூட விட்டுவைக்காத அளவிற்கு குற்றவாளிகள் துணிச்சலுடன் வலம் வருவது மட்டுமே திமுகவின் சாதனை.
இந்தக் குற்றச் செயல்களின் பின்னணியில் தமிழகத்தில் தடையின்றிப் புழங்கும் போதைப் பொருட்களின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தத் தவறியது இந்த அரசின் மிகப்பெரிய நிர்வாகத் தோல்வியாகும். போதையின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்கள் தங்களின் நன்னெறியைத் தொலைத்துவிட்டு, இது போன்ற மிருகத்தனமான செயல்களில் ஈடுபடுவது சமூகச் சீரழிவிற்கு வழிவகுக்கிறது. காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர், விளம்பரங்களில் காட்டும் கவனத்தை மக்களின் பாதுகாப்பில் காட்டத் தவறிவிட்டார். ஸ்டாலின் அவர்களே.. உங்களுக்கு தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சேலம் கோரிமேடு அருகே, 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் இரண்டு பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில், தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் கூட கஞ்சா புழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பின்விளைவுகள் மிகவும் அச்சமூட்டுகின்றன. நமது குழந்தைகள் எதிர்காலம் குறித்து பயம் ஏற்படுகிறது.
எங்கெங்கு கஞ்சா விற்பனை நடக்கிறது என்பது பள்ளி செல்லும் மாணவர்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால், காவல்துறைக்குத் தெரியவில்லை என்பதை ஏற்க முடியாது. கஞ்சா விற்பனையின் பின்னணியில், பெரும்பாலும் திமுகவினர் இருப்பதால், ஐந்து ஆண்டுகளாக, காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகள் கட்டப்பட்டு இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதற்கு மேலும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பொதுமக்களுக்குச் செய்யும் துரோகம். உடனடியாக, தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கஞ்சா புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.