குரங்கை விரட்டியபோது விபரீதம்; தந்தை கையில் இருந்த 2 மாத குழந்தை கீழே விழுந்து பலி

By Velmurugan sFirst Published Dec 18, 2022, 12:52 PM IST
Highlights

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே குரங்கை விரட்டிய நபரின் கையில் இருந்த 2 மாத குழந்தை தவறுதலாகக் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் மலைகிராமத்தைச் சேர்ந்தவர்கள் நிஷாந்த், மாலதி. நிஷாந்த் அப்பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் பணியாற்றி வருகிறார். கடந்த 15ம் தேதி இவர்கள் இருவரும் தங்களது 2 மாத கைக்குழந்தையுடன் அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றனர். பொருட்களை வாங்கிக் கொண்டு இருவரும் திரும்ப வந்துகொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் அருகில் இருந்த குரங்கு ஒன்று திடீரென நிஷாந்தின் கையில் இருந்த மளிகைப் பொருட்களை பறித்துக் கொண்டு ஓடத்தொடங்கியுள்ளது. குரங்கை சற்றும் எதிர்பாராத நிஷாந்த் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு குரங்கை பிடிக்க ஓடியுள்ளார். அப்போது நிலைத் தடுமாறி கையில் இருந்த குழந்தையை தவறுதலாக கீழே போட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டு, வீக்கமடைந்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள நாகலூர் ஆரம்ப சுகாரா நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 மாத கைக்குழந்தை தந்தையின் கையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

click me!