
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் உயிரிழந்தார். படுகாயங்களுடன் அவரது மனைவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர் மாவட்டம், ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசப்பாண்டியன். இவர் பாஜகவில் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். நேற்று மாலை கதிரேசப் பாண்டியனும், அவரது மனைவி ராமலட்சுமியும் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு செல்ல மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை கதிரேசப் பாண்டின் ஓட்டி சென்றார்.
தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் சென்றபோது தேனியில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதியது. இதில் கதிரேசப் பாண்டியன், அவரது மனைவி ராமலட்சுமி இருவருமே படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவரையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது கதிரேசப் பாண்டியன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயங்களுடன் அவரது மனைவி ராமலட்சுமி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.