கணவரை இழந்தும் கொரோனா நிதிக்காக மூன்றரை சவரன் நகையை அளிக்க வந்த பெண்... கலெக்டர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

By Thiraviaraj RMFirst Published Jul 20, 2021, 6:38 PM IST
Highlights

நிவாரண நிதி வழங்கச் சென்ற ஆசிரியை இதனை எதிர்பார்க்கவே இல்லை. மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார். 

கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருந்தாலும், கொரோனா நிவாரண நிதிக்காக மூன்றரை சவரன் நகையை அளிக்க முன்வந்த பெண்ணின் செயலை பாராட்டி, அரசு வேலைக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்திருக்கிறார் விருதுநகர் ஆட்சியர் மேகநாதரெட்டி.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வாகி ஏழ்மையால் கலந்து கொள்ள முடியாமல் தவித்து வந்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் நிதியுதவி செய்தார். இதுமட்டுமல்ல பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் விருதுநகர் மாவட்ட ஆட்சியரான மேகநாதரெட்டி.

 

இந்நிலையில், கொரோனா நிவாரண நிதியாக தனது மூன்றரை பவுன் நகையை வழங்க முன்வந்து மாவட்ட ஆட்சியரை தனது மகனுடன் சென்று சந்தித்துள்ளார் ராஜபாளையத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை கவிதா. அங்கு ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம், மூன்றரை சவரன் நகையை கொரோனா நிவாரண நிதியாக அளித்தார். ஆனால் நகையாக பெற மறுத்த ஆட்சியர், பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என முன்வந்த சேவையை பாராட்டி திருக்குறள் புத்தகம் பரிசளித்தார்.

ஆசிரியையிடம், ‘’உங்கள் மகனின் எதிர்காலத்திற்கு நகை பயன்படும். உங்கள் மகனின் கல்வி செலவை அரசே ஏற்க நடவடிக்கை எடுக்கிறேன். கணவரை இழந்த உங்களுக்கு அரசு வேலை வழங்க பரிந்துரை செய்கிறேன்’’எனத் தெரிவித்துள்ளார் ஆட்சியர் மேகநாத ரெட்டி. நிவாரண நிதி வழங்கச் சென்ற ஆசிரியை இதனை எதிர்பார்க்கவே இல்லை. மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார். தன்னலம் பார்க்காமல் ஏழ்மையிலும் பிறருக்கு உதவி செய்ய சென்ற ஆசிரியை கவிதாவை பலரும் பாராட்டுகின்றனர். தர்மம் தலைகாக்கும் என்பதற்கு இந்த சம்பவம் நல்லதொரு உதாரணம். 

click me!