வேலூர் இப்ராஹிம் கைது: குடியாத்தத்தில் பரபரப்பு!

By Manikanda PrabuFirst Published Jul 24, 2023, 11:51 AM IST
Highlights

பாஜகவின் 9 ஆண்டுகள் சாதனை குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்க வந்த பாஜக தேசிய சிறுபான்மையினர் அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் குடியாத்தத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்களை மே 30ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் அக்கட்சி நடத்தியது. தொடர்ந்து, 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பாஜகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பிரசாரத் திட்டத்தையும் அக்கட்சி முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில், பாஜகவின் 9 ஆண்டுகள் சாதனை குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்க வந்த பாஜக தேசிய சிறுபான்மையினர் அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் குடியாத்தத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் பாஜக மத்திய அரசின் 9 ஆண்டுகள் சாதனைகள் குறித்து இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான தரணம் பேட்டை, சித்தூர் கேட் உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவின் தேசிய சிறுபான்மை அணியின் செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் முக்கிய வீதிகளில் துண்டு  பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அவதூறாக பேசிய திமுக பிரமுகர்: திருப்பத்தூரில் பெண்கள் சாலை மறியல்!

இதனிடையே, தரணம்பேட்டை பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் வேலூர் இப்ராஹிம் வருவதை கண்டித்து,  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் ஜனநாயக  கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமை குடியாத்தம் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!