அடுத்த 24 மணி நேரத்திற்கு மீண்டும் மழை..! வானிலை மையம் அறிவிப்பு..!

By Manikandan S R SFirst Published Jan 5, 2020, 2:37 PM IST
Highlights

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. முக்கிய அணைகள் பல நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வடகிழக்கு பருவமழை நிறைவடையும் தருவாயில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் மழை வெளுத்து வாங்கியது.

சென்னை,காஞ்சிபுரம், வேலூர் உட்பட சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. உள்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வாட்ராப் பகுதியில் 4 சென்டிமீட்டர் மழையும் ராஜபாளையத்தில் 3 சென்டிமீட்டர் அளவில் மழை பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

click me!