தமிழகத்தில் மீண்டும் மழை..! வானிலை மையம் அறிவிப்பு..!

By Manikandan S R SFirst Published Jan 4, 2020, 3:33 PM IST
Highlights

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது நிறைவடையும் கட்டத்தில் இருக்கிறது. கடந்த இரண்டு மாதமாக பெரும்பாலான இடங்களில் பருவ மழை கொட்டித்தீர்த்ததை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்தது. மாநிலத்தின் பிரதான அணைகள் பல நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேட்டூர் அணை கடந்த வருடத்தில் மட்டும் நான்கு முறை நிரம்பியுள்ளது. நெல்லை மாவட்டம் காரையார் அணை நிரம்பி தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்தநிலையில் ஜனவரி 5 ம் தேதி வரை பருவ மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக சென்னை, வேலூர், காஞ்சிபுரம் உட்பட சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும்.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே சென்னையில் தற்போது அதிகாலையில் பனிமூட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் சென்னைக்கு வரும் விமானங்கள் பல தாமதமாக வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 8 மணி வரை கடும் பனிமூட்டம் நீடிக்கிறது.

click me!