எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்யாணம் பண்ணிங்க! நான் சந்தோஷமாவே இல்லை! அப்பாவிடம் போறேன்! இளம்பெண் தற்கொலை!

By vinoth kumarFirst Published Feb 24, 2024, 12:16 PM IST
Highlights

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த கீழ் கொத்தூர் புதுமனை காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2வது மகன் தமிழரசன் (26) ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த கீழ் கொத்தூர் புதுமனை காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2வது மகன் தமிழரசன் (26) ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த மீனாட்சி (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. 

இந்நிலையில், இவர்களது திருமண வாழ்க்கை சந்தோஷமாக சென்றுக்கொண்டிருந்த நிலையில் கணவர் தமிழரசன் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதை மறைத்து 2வது திருமணம் செய்தது மீனாட்சிக்கு தெரியவந்தது. இதனை சற்றும் எதிர்பாராத மனைவி மீனாட்சி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கணவர் தமிழரசன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் கேட்ட போது தகராறு ஏற்பட்டது. 

இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனவேதனையில் இருந்த மீனாட்சி அனைவரும் தூங்க சென்ற பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் காலையில் எழுந்து பார்த்த போது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டு கதறினார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீனாட்சி உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அவரது அறையை சோதனை செய்த போது கடிதம் ஒன்று சிக்கியது. அதில், நான் ஏற்கனவே தமிழரசனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று கூறினேன். மாமா என் பேச்சைக் கேட்காமல் என்னை அவருடன் கல்யாணம் செய்து வைத்தீர்கள். நான் நிம்மதியாக இல்லை என் அப்பாவிடமே சென்று விடுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் வேலூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

click me!