
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த திருவலம் குகைநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூபாலன். இவருடைய மகன் லோகேஷ் (வயது 21) படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து உள்ளார். இந்நிலையில் பகல் நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் குகைநல்லூரில் இருந்து திருவலம் மேம்பாலம் அருகே வாகனம் வேகமாக சென்றுள்ளது. அப்போது அவருக்கு முன்பாக சென்ற காரின் மீது லோகேஷ் வேகமாக மோதியதில் நிலை தடுமாறி சாலையில் அருகே இருந்த மேம்பால தடுப்பு கான்க்ரீட் சுவற்றில் மோதி தலையில் பயங்கர காயம் ஏற்பட்டு சாலையின் நடுவே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் காவல் துறையினர் லோகேஷ் உயிரிழந்து விட்டதை உறுதிபடுத்தினர். இதனைத் தொடர்ந்து சாலையில் இறந்து கிடந்த லோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவலம் அருகே இருசக்கர வாகனத்தில் காரை முந்த முயன்ற இளைஞர் மேம்பால தடுப்பு சுவரில் இடித்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.