ஆம்பூர் அருகே செல்போனில் கேம் விளையாடியபடி வெளிச்சம் இல்லாத பகுதியில் நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் அருகே செல்போனில் கேம் விளையாடியபடி வெளிச்சம் இல்லாத பகுதியில் நடந்துசென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சியின் குட்டகந்தூர் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் மனைவி லக்சனா. இவரது கணவர் சென்னையில் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த லக்சனா, தனது செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளில் அடிக்கடி மூழ்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. தினந்தோறும் நள்ளிரவு 1 மணி வரை ஆன்லைனில் அவர் 'கேம்' விளையாடி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அவரது குடும்பத்தார் கண்டித்தும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு தனது பாட்டி வீட்டின் பின்புறம் உள்ள விவசாய நிலம் அருகே வெளிச்சம் இல்லாத பகுதியில் நடந்தபடியே லக்சனா ஆன்லைனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள விவசாயக் கிணற்றில் அவர் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அவரது பாட்டி மற்றும் குடும்பத்தார் ஓடிவந்து பார்த்தபோது லக்சனா கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
உடனே, போலீசாருக்கும், ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் கிணற்றில் இறங்கிய தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் கழித்து இறந்த நிலையில் கிடந்த லக்சனாவின் உடலை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.