டிரைவர் குடைபிடித்தபடி ஓட்டும் நவீன அரசு பேருந்து..! ஆபத்தான பயணத்தில் பயணிகள் கடும் அவதி..!

By Manikandan S R SFirst Published Oct 31, 2019, 12:40 PM IST
Highlights

வேலூர் அருகே கனமழை பெய்து வந்த நிலையில் பேருந்து ஓட்டுநர் குடை பிடித்தபடி பேருந்தை இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 16 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அது முதல் மாநிலம் முழுவதும் பரவலாக மழை வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதையடுத்து மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்தும், மழைகோட் அணிந்தும் மக்கள் சென்று வருகின்றனர்.சிலர் தங்கள் வாகனங்களை பயன்படுத்தாமல் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலானோர் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வருகினர். இந்த நிலையில் மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைபிடித்தது போக, அரசு பேருந்தில் ஓட்டுனரும் குடை பிடித்து பேருந்தை ஒட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

வேலூர்-திருவண்ணாமலை மார்க்கத்தில் விழுப்புரம் கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் பெரும்பாலானவை பழையதாக இருக்கிறது. மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படும் நிலையில், மழை காலங்களில் மக்கள் பயணம் செய்ய முடியாத அளவிற்கு ஒழுகி வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன் ரூட் நம்பர் 225 . அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பேருந்துக்குள் மழை நீர் ஒழுகிய நிலையில் பயணிகள் குடை பிடித்த படி பயணம் செய்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பேருந்து ஓட்டுனரும் கையில் குடை பிடித்தபடி பேருந்தை இயக்கி கொண்டிருந்தார். இது பயணிகளை அதிர்ச்சியடைய செய்தது. ஒரு கையில் குடையும், ஒரு கையில் பேருந்தை இயக்கியும் ஓட்டுநர் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருந்தார். பயணிகளும் வேறு வழியின்றி பயத்துடனே பயணம் செய்தனர். சிலர் இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பரவ விட அது தற்போது வைரலாகி உள்ளது.

இதனிடையே பழைய பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாமல் தொடர்ந்து இயக்கப்படுவதால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

click me!