ஒன்றரை லட்சத்திற்கு விற்கப்பட்ட பச்சிளம் ஆண்குழந்தை..! மருத்துவ பரிசோதனையில் சிக்கிய வயதான தம்பதியினர்..! பரபரப்பு தகவல்கள்..!

By Manikandan S R SFirst Published Nov 7, 2019, 12:41 PM IST
Highlights

குழந்தையை பெற்ற தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. வறுமை காரணமாக அதை விற்க முடிவெடுத்துள்ளனர். அந்த நேரத்தில் தான் விபத்தில் மகனை பறிகொடுத்த வயதான தம்பதியினர் குழந்தையை வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது. 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி லட்சுமி(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இந்த தம்பதியினருக்கு 30 வயதில் மகன் ஒருவன் இருந்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி அவர்களது மகன் மரணமடைந்துள்ளார். ஒரே மகனை விபத்தில் பறி கொடுத்துவிட்டு அந்த தம்பதியினர் மிகுந்த மனவருத்தத்தில் இருந்திருக்கின்றனர். இதையடுத்து மகனின் நினைவாக ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர்.

அதன்படி சட்டத்திற்கு உட்பட்டு குழந்தையை தத்தெடுக்க அவர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் அது எதுவும் கை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் குழந்தைகள் விற்கும் புரோக்கர் அந்தோணியம்மாள் என்பவரின் அறிமுகம் அவர்களுக்கு கிடைத்தது. அவர் ஆண் குழந்தை ஒன்றை வாங்கித் தருவதாக கூறி இருக்கிறார். இதையடுத்து கடந்த மாதம் திருச்சி, மணப்பாறை அரசு மருத்துவமனை அருகே இருக்கும் ஆறுமுகம்-ரேவதி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்கிற தம்பதியினருக்கு மூன்றாவதாக பிறந்த 25 நாட்களேயான ஆண்குழந்தையை புரோக்கர் அந்தோணியம்மாள் மூலம் 1.5 லட்சம் ரூபாய்க்கு விலைபேசி வாங்கியிருக்கின்றனர்.

குழந்தையை கார்த்தி தம்பதியினர் வளர்க்க தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் குழந்தைக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தையை அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவர்கள் குழந்தை பலகீனமாக இருப்பதால் தாய்ப்பால் கொடுக்க கூறியுள்ளனர். அப்போது வயதான தமபதியினர் இருவரும் தயங்கி இருக்கின்றனர். மருத்துவர்கள் நடத்திய விசாரணையில் குழந்தையை விலைகொடுத்து வாங்கிய விஷயத்தை அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வாழைப்பழத்துக்காக நடந்த அக்கப்போர்..! பெட்டிக்கடைக்காரரை ஓட ஓட தாக்கிய வாலிபர்கள்..!

இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள், இரு தம்பதியினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் குழந்தையை பெற்ற தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. வறுமை காரணமாக அதை விற்க முடிவெடுத்துள்ளனர். அந்த நேரத்தில் தான் விபத்தில் மகனை பறிகொடுத்த வயதான தம்பதியினர் குழந்தையை வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது. 

இதனிடையே குழந்தையை பெற்ற தம்பதியினர் இருவருக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இருந்திருக்கிறது. ஆனால் குழந்தைகள் யாருக்கும் அதனால் பாதிப்பு ஏற்படவில்லை. மூன்றாவதாக பிறந்த ஆன் குழந்தைக்கு மட்டும் இதய பிரச்சனை இருந்துள்ளது. அதை மறைத்து, வயதான தம்பதியிடம் விற்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சி காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரபல ரவுடி தலை துண்டாக்கி கொடூரமாக கொலை..! மர்ம கும்பல் வெறிச்செயல்..!

click me!