பொங்கல் தொகுப்பு புளியில் பல்லி.. அம்பலப்படுத்திய தந்தை.. தீக்குளித்த மகன்.. திருத்தணியில் அதிர்ச்சி..!

By vinoth kumarFirst Published Jan 12, 2022, 9:57 AM IST
Highlights

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, நந்தன் தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கியுள்ளார். அதில் இருந்த புளியில், இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதை நந்தன் தனது உறவினர்களிடம் தெரிவித்தாராம். இதனால் இந்த விஷயம் ஊருக்குள் வேகமாக பரவியது.

அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாகக் குற்றம்சாட்டிய திருத்தணி அதிமுக பிரமுகர் நந்தன் மீது வழக்குப் பதிவு செய்து அவரது மகனுக்கு காவல் துறையினரின் கொடுத்த நெருக்கடி காரணமாக மனஉளைச்சலில்  தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட குப்புசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தோட்டக்கார மடம் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி (36). இவர், சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தந்தை நந்தன், அதிமுக திருத்தணி 15-வது வட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, நந்தன் தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கியுள்ளார். அதில் இருந்த புளியில், இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதை நந்தன் தனது உறவினர்களிடம் தெரிவித்தாராம். இதனால் இந்த விஷயம் ஊருக்குள் வேகமாக பரவியது. இந்த விவகாரம் டி.வி., செய்திதாள்களிலுத் வெளியானது. 

இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாகச் சொல்லி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக, நந்தன் மீது திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, தந்தை மீது போலீஸார் பொய்வழக்குப் போட்டிருப்பதாக குப்புசாமி புலம்பினாராம். இது தனக்கு அவமானமாக இருப்பதாகவும் சொன்னவர், நேற்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொடார். 

இதில்,  படுகாயமடைந்த குப்புசாமியை திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குப்புசாமி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததால், அவமானம் தாங்காமல் மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் அதிமுகவினரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

click me!