கனவுகளை சுமந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை கழிவறை சுத்தம் செய்யவைத்த நிர்வாகம்; பெற்றோர் ஆதங்கம்

By Velmurugan sFirst Published Aug 29, 2023, 4:58 PM IST
Highlights

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை கழிவறை, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பெற்றோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே உடையார்பாளைத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கலையரசி என்பவர் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசுவதும், அடிப்பதும், மற்றும் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது, போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு குழந்தைகள் யாரும் தண்ணீர் பருகக் கூடாது, கழிவறைக்கு செல்ல கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால் ஒரு சில பெண் குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் குடிக்காத சில மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேனியில் மனைவி தூக்கிட்டுக்கொண்ட அதே கயிற்றில் கணவனும் தூக்கிட்டு தற்கொலை; கலங்கி நிற்கும் மகள்

இந்த தலைமை ஆசிரியரின் கொடுமையான செயலால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பள்ளியில் 150 குழந்தைகள் படித்து வந்த நிலையில், தற்போது 60 குழந்தைகள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். மேலும் ஏற்கனவே இவர் பணியாற்றிய இரண்டு பள்ளிகளிலும் இதே போன்று சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதனை அடுத்து காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்  காலை பள்ளி முன்பாக திரண்டு விசாரணைக்காக வந்திருந்த வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். தலைமை ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

தூத்துக்குடியில் வருங்கால மாமனாருக்கு ஸ்கெட்ச் போட்ட வாலிபர்; கச்சிதமாக முடித்த மனைவி, மகள்கள்

அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளி குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் தலைமை ஆசிரியை மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் உண்மை என நிரூபணம் ஆனதால், அவரை பணியிட மாற்றம் செய்ய மேலதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர், தலைமை ஆசிரியருக்கு உரிய தண்டனை வழங்குவதற்கு பதிலாக, சக ஆசிரியரை காப்பாற்றும் நோக்கத்தோடு, வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மற்ற ஆசிரியர்கள்  செயல்படுவதாகவும், தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் தலைமை ஆசிரியை பணி நீக்கம் செய்யும் வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என உறுதியாக தெரிவித்தனர். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் உடையார்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!