திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்!

By SG BalanFirst Published Aug 27, 2023, 9:04 PM IST
Highlights

திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் பனியன் ஏற்றமதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வாமன் பனியன் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை தொழிலாளர்கள் வேலையை முடித்துவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

பனியன் நிறுவனத்திலிருந்து திடீரென பிரம்மாண்டமாக கரும்புகை வெளியேறியதை அடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் பல்லடம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

3000 சதுர அடிக்கும் மேல் பரந்து விரிந்துள்ளது. தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிக்கத்தக்க இயந்திரங்கள், ஏற்றுமதிக்கு தயார் நிலையில் இருந்த ஆடைகள், நூல் உள்ளிட்ட பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் நெருப்பில் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த பயங்கர தீ விபத்திற்குக் காரணம் என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். 

மாலையில் தொழிலாளர்கள் வேலையை முடித்து சென்ற பின்பு இந்த தீ விபத்து நடந்திருப்பதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் பின்னலாடைகள் மற்றும் மூலப் பொருட்கள் தீயில் கருகியதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

click me!