திருப்பூரில் மத்திய காவல் நிலையம் அருகே அடுத்தடுத்து ஐந்து கடைகளில் கொள்ளை

By Velmurugan sFirst Published Mar 1, 2023, 8:00 PM IST
Highlights

திருப்பூர் மாநகரின் மத்திய காவல் நிலையத்திற்கு சிறிது தூரத்தில் இயங்கி வந்த வணிக வளாகத்தின் 5 கடைகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாநகரில் உள்ள கேவிஆர் நகர் பகுதியில் மேற்கு பிரதான சாலையில் ஆறு கடைகளை கொண்ட திருமலை  என்ற வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் மளிகை கடை, துணிக்கடை, அழகு சாதன பொருட்கள், இ சேவை மையம் மற்றும் முடி திருத்தகம் என 5 கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு கடை காலியாக உள்ளது. 

இதே வீதியில் திருப்பூர் மத்திய காவல் நிலையம் சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஐந்து கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதில் மளிகை கடையில் திருடும் பொழுது அங்கிருந்த சாக்லேட்டுகளை எடுத்து சாப்பிட்டு விட்டு சென்றுள்ளனர். 

தந்தையின் பிறந்த நாளில் மக்களுக்கு பரிசு பொருட்களை வாரி வழங்கிய உதயநிதி

காலையில் கடையை திறக்க உரிமையாளர்கள் வந்து பார்த்தபொழுது அனைத்து கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கொள்ளை போனது தெரியவந்தது. இதனை அடுத்து கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருப்பூர் மத்திய காவல் நிலைய கவலர்கள் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையன் குறித்து விசாரித்து வருகின்றனர். மத்திய காவல் நிலையம் அமைந்துள்ள அதே வீதியில் சிறிது தூர இடைவெளியில் நடைபெற்றுள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வாதாரத்திற்காக தள்ளுவண்டி கேட்ட சிறை கைதி; உணவகமே அமைத்து கொடுத்த தன்னார்வலர்கள்

click me!