காவிரி விவகாரத்தில் தமிழக அரசு, கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தாதது ஏன்? மணியரசன் கேள்வி

By Velmurugan sFirst Published Sep 22, 2023, 11:36 AM IST
Highlights

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற்று தராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் வரும் 26ம் தேதி தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக அரசு கர்நாடகத்திற்கு வல்லுநர் குழுவை அனுப்பி அங்குள்ள அணைகளில் எவ்வளவு நீர் இருப்பு இருக்கிறது. சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள அணைகளில் எந்த அளவு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதேபோன்று கர்நாடக அரசும் வல்லுனர் குழுவை அனுப்பி தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் நீர் இருப்பு எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளட்டும்.

இதற்கு உதாரணமாக பீகாரிகள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தியின் போது பீகார் அரசு உண்மை கண்டறியும் குழுவை தமிழகத்திற்கு அனுப்பியது. அதேபோன்று தமிழக அரசு கர்நாடகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுத்தோம். தமிழக அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் காவிரி ஆணையத்தின் உத்தரவை நான்கு மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலம் செயல்படுத்தவில்லை என்றால் உடனடியாக இந்திய அரசுக்கு தெரிவித்து இந்திய அரசு தலையிட்டு அதனை செயல்படுத்தலாம் என்று கூறியிருக்கிறது.

பென்னாகரம் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவு? மாணவர்கள் அதிர்ச்சி

இது முதுகலை படித்த துரைமுருகனுக்கு தெரியாதா? இல்லை அந்த துறை சார்ந்த செயலாளர்களுக்கு தெரியாதா? இதனை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் பின்பற்றுவதில்லை. அவர் சிறந்த நடிகர். நடுநிலைவாதி அல்ல. கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படக் கூடியவர். அவர் இது குறித்து இந்திய அரசுக்கு சொல்லி அதை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும்.

அதேபோன்று காவிரி விவகாரம் தொடர்பாக மூன்று முறை கர்நாடகத்தில் சித்தராமையா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். தமிழகத்தில் அவ்வாறு எந்த அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டவில்லை. தமிழக அரசு பொதுமக்களை போன்று அங்கு சென்று காவிரி மேலாண்மை ஆணையத்தில் மனு கொடுத்து கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு சமீபத்தில் ஒரு உண்ணாவிரதம் நடத்தினார்கள். அது அவர்கள் தனிப்பட்ட உரிமை. அதேபோன்று ஒரு போராட்டத்தை காவிரி தொடர்பாக ஏன் அரசு முன்னெடுக்கவில்லை.

ஆம்பூரில் துப்புரவு தொழிலாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - காவல் துறையினர் விசாரணை

இப்போது துரைமுருகன் உச்ச நீதிமன்றம் தான் கடைசி நம்பிக்கை என்று கூறுகிறார். பேசி பேசி பார்த்து விட்டோம் என்று கூறுகிறார். எனக்கு ஒரே ஒரு தகவல் தான் வேண்டும். தமிழக அரசோ, துறைமுருகனோ ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை முறை கர்நாடகத்துக்கு சென்று இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்?

பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை. எனவே காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் வருகிற 26ம் தேதி தஞ்சை மாவட்டம் பூதலூரில் கர்நாடக அரசு காவிரி தண்ணீரை திருடுவதை கண்டித்தும், மத்திய அரசு அதற்கு துணை போவதை கண்டித்தும் தமிழக அரசு கண் துடைப்பை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. அதற்கு பொதுமக்கள், உழவர்கள் ஆதரவு தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

click me!