புல்லட் பைக்கை டார்கெட் செய்து திருடிய கொள்ளையன் கைது; 20 புல்லட்கள் பறிமுதல்

By Velmurugan sFirst Published May 10, 2023, 12:43 PM IST
Highlights

தஞ்சாவூர் பகுதியில் திருடப்பட்ட 20 புல்லட் மோட்டார் சைக்கிள்களை திருடிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய மூவரை தேடி வருகின்றனர். 

தஞ்சாவூர் நகரம், வல்லம், ஒரத்தநாடு காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகள், வீடுகள் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த புல்லட் மோட்டார் சைக்கிள்கள் அவ்வப்போது திருட்டு போனது. இது தொடர்பாக வாகனங்களின் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். விலை உயர்ந்த புல்லட்டை திருடும் கும்பலை கைது செய்ய, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி, தஞ்சாவூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலும், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் மேற்பார்வையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், குறைந்த விலையில் புல்லட் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்பவர்கள் குறித்தும் விசாரித்து வந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்ட புல்லட் மோட்டார் சைக்கிளை ஒரு இளைஞரிடம் குறைந்த விலைக்கு விற்க முயலும் போது, போலீஸாரிடம் ஒருவர் பிடிபட்டார். பின்னர் அவரை காவல் துறையினர் விசாரித்தபோது, தஞ்சாவூர் பூக்கார முதல்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அரவிந்த் (30) என்பது தெரியவந்தது.

பொதுத்தேர்வில் 100க்கு 138 மதிப்பெண் பெற்றும் தோல்வியடைந்த மதுரை மாணவி
 
தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரித்த போது, தஞ்சாவூர் பகுதியில் புல்லட் மோட்டார் சைக்கிள்களை மட்டும் நான்கு பேர் சேர்ந்து திருடுவதாகவும், அதில் உள்ள பதிவு எண்களை மாற்றி, குறைந்த விலைக்கு தஞ்சாவூர் பகுதியிலேயே விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி குறைந்த விலைக்கு விற்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான 20 புல்லட் மோட்டார் சைக்கிள்களை காவல் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

குடும்ப வறுமையால் வேலைக்கு சென்ற மாணவன்; சாலையின் குறுக்கே வந்த மாடால் நேர்ந்த சோகம்

மேலும், இந்த புல்லட் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்புடைய காசவளநாடு புதூரைச் சேர்ந்த அர்ஜூன், அரவிந்த், தஞ்சாவூர் கீழவாசலைச் சேர்ந்த அலெக்ஸ் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.

click me!