48 மணி நேரமாக கிணற்றில் தவித்த மூதாட்டி..! அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்பு..!

By Manikandan S R SFirst Published Nov 6, 2019, 1:07 PM IST
Highlights

சேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி ஒருவர் இரண்டு நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே இருக்கிறது கூடமலை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள்(60). இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் வள்ளியம்மாள் மட்டும் தனிமையில் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு அவ்வப்போது மனநிலை பாதிக்கப்படும் என்று அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களாக வள்ளியம்மாள் வீட்டில் இல்லாமல் இருந்திருக்கிறார்.

இதன்காரணமாக அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். இதனிடையே ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் 40 அடி ஆழம் கொண்ட வறண்ட கிணற்றில் மூதாட்டி ஒருவர் வெளிவரமுடியாமல் தவித்து வருவதாக ஆடு மேய்ப்பவர் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். கிராமத்தினர் வந்து பார்த்த போது அது மூதாட்டி வள்ளியம்மாள் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு மூலம் மூதாட்டி வள்ளியம்மாளை பத்திரமாக மீட்டனர்.

இதையும் படிங்க: மகன் இறந்த துக்கத்தில் உயிரைவிட்ட தந்தை..! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கிணற்றில் விழுந்த வள்ளியம்மாள் சிறு சிறு காயங்களுடன் இரண்டு நாட்களாக வெளி வரமுடியாமல் தவித்துள்ளார். 48 மணி நேரத்திற்கு மேலாக உணவு உட்கொள்ளாமல் இருந்ததால் சோர்ந்து காணப்பட்டார். இதன்காரணமாக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: நடத்தியது நடனப்பள்ளி..! கொடுத்ததோ பாலியல் தொல்லை..! போக்சோவில் பரதநாட்டிய கலைஞர் அதிரடி கைது..!

click me!