Watch : குடிகார கணவனின் தலையில் குளவி கல்லை போட்டு கொலை செய்த மனைவி! இது தான் காரணம்!

By Dinesh TGFirst Published May 16, 2023, 12:02 PM IST
Highlights

சேலம் அருகே மது குடித்து விட்டு வந்து சண்டை சச்சரவில் ஈடுபட்ட கணவனின் தலையில் குளவிக் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஜாகிர்ரெட்டிப்பட்டி ரயில்வே லைன் பகுதியில் ரமேஷ் - மணிமேகலை தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்தார். ரமேஷ், தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகாத முறையில் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தினந்தோறும் மணிமேகலையை அடித்து உதைத்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல மது அருந்திவிட்டு வந்த ரமேஷ்கும், மணிமேகலைக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ரமேஷ் மணிமேகலையை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிமேகலை வீட்டிலிருந்த குளவி கல்லை எடுத்து ரமேஷின் தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சூரமங்கலம் காவல்துறையினர், ரமேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மணிமேகலையை காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியே, கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!