இலக்காரமாக நினைப்பவர்களுக்கு சரியான எடுத்துக்காட்டு.. சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்த சப்-கலெக்டர்

By vinoth kumarFirst Published Aug 20, 2021, 12:58 PM IST
Highlights

பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்ட நிகழ்வு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்ததோடு, பொதுமக்களிடையே அரசு மருத்துவமனை மீதான நம்பகத்தன்மையை மேலும் அதிகரித்துள்ளது.

அரசுத்துறையை சேர்ந்தவர்கள்  அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகளைப் புறக்கணித்துவரும் நிலையில், கேரள மாநிலத்தில் பணியாற்றிவரும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் கரடிப்பட்டியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவரது மகள் தர்மலாஸ்ரீ (29). இவர் கடந்த 2019ல் நடந்த ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட உதவி கலெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு சேலம் கிச்சிபாளையத்தை  சேர்ந்த மருத்துவர் தாமரைகண்ணனுடன் திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியான தர்மலாஸ்ரீ, பிரசவத்திற்காக கடந்த மாதம் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

கடந்த 2 வாரமாக அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால், அவரை தனியார் மருத்துவமனையில்  சேர பெற்றோர் மற்றும் உறவினர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதனை மீறி கடந்த 11ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் தர்மலாஸ்ரீ அனுமதிக்கப்பட்டார்.


 
அங்கு அவருக்கு நேற்று முன்தினம்  சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. சேலம் அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்ததாக உதவி கலெக்டர் தர்மலாஸ்ரீ நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்ட நிகழ்வு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்ததோடு, பொதுமக்களிடையே அரசு மருத்துவமனை மீதான நம்பகத்தன்மையை மேலும் அதிகரித்துள்ளது.

click me!