தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கு.. இன்று பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Mar 5, 2022, 11:07 AM IST
Highlights

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், நாமக்கல்லை சேர்ந்த சுவாதியை காதலித்து வந்தார். இருவரும்  23.6.2015 ல் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் இருவரையும் மிரட்டி உள்ளார். பிறகு ஸ்வாதியை அனுப்பிவிட்டு கோகுல்ராஜை தன்னுடைய காரில் அழைத்துச் சென்றார்.

பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், நாமக்கல்லை சேர்ந்த சுவாதியை காதலித்து வந்தார். இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் இருவரையும் மிரட்டி உள்ளார். பிறகு ஸ்வாதியை அனுப்பிவிட்டு கோகுல்ராஜை தன்னுடைய காரில் அழைத்துச் சென்றார். பின்னர், மறுநாள் காலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அைனவரும் கைது செய்யப்பட்டனர். சாதி ஆணவப் படுகொலை வழக்கை தீவிரமாக விசாரித்த வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி.விஷ்ணுப்ரியா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி விசாரணையும் தொடங்கியது.  இந்த கோகுல்ராஜ் வழக்கில் காதலி சுவாதி உட்பட மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞரை மாற்ற கோரி கோகுல்ராஜின் தாயார் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது .  இதன்பின்னர் அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டு இந்த வழக்கானது 2019ம் ஆண்டு மே 5ம் தேதி முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அனைத்து வழக்கு விசாரணை நிறைவு பெற்றதையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. கடந்த 7 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!