சேலத்தில் சமூகப் பரவலாக மாறியதா கொரோனா? இறுதி சடங்கில் பங்கேற்ற மேலும் 70 பேருக்கு பாதிப்பு..!

By vinoth kumarFirst Published Jul 1, 2020, 5:12 PM IST
Highlights

சேலத்தில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 58 பேருக்கு ஏற்கனவே கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 58 பேருக்கு ஏற்கனவே கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பண்ணவாடி கிராமத்தில் செல்வம் என்பவர் கடந்த 21-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அரசின் ஊரடங்கு விதிமுறைப்படி துக்க நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். ஆனால் அவரது இறுதி சடங்கில் அரசின் விதி முறைகளை மீறி நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில்,  இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.  இதனையடுத்து கிராமம் முழுவதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு நேற்று பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொளத்தூர் ஒன்றியம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் சேலத்தில் இன்று 191 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 971 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 284 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

click me!