கோவிலுக்கு சென்று திரும்பியபோது பயங்கர விபத்து.. 2 பெண்கள் துடிதுடித்து உயிரிழப்பு.. 7 மாத குழந்தை படுகாயம்.!

By vinoth kumarFirst Published Feb 22, 2020, 5:42 PM IST
Highlights

ஈரோடு அருகே நள்ளிரவில் இரண்டு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 மாத குழந்தை உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். 

ஈரோடு அருகே நள்ளிரவில் இரண்டு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 மாத குழந்தை உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். 

சேலம் மாவட்டம் பழைய சூரமங்கலம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் விஜயவர்மன். இவரது மனைவி கவுரி (35). இவர்களுக்கு தேவதிசா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இவரது உறவினர்கள் ஜோதி (55), சுவர்ணலகரி (19), ஜீவிதா (23), அனுசியா தேவி (25), சுபாதேவி (39), லட்சுமி (50), மித்ரா (7) ஆகியோர் நேற்று காலை கார் மூலம் சேலத்தில் இருந்து கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்றனர்.

பின்னர் இவர்கள் அனைவரும் நள்ளிரவில் கோவையில் இருந்து சேலம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை நவீன் குமார் என்பவர் ஓட்டி வந்தார். தேசிய நெடுஞ்சாலை என்பதால் கார் அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது. கார் இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு ஈரோடு மாவட்டம் ஆட்டையாம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. 

பின்னர், தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு எதிர்ப்புறத்தில் உள்ள சாலையில் சென்றது. எதிர்ப்புறம் கோவையிலிருந்து கேரளா பதிவு எண் கொண்ட கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் மீது இவர்கள் வந்த கார் மோதி நேருக்கு நேர் மோதியது. இதில், 2 கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மற்றவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை உள்பட 8 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!