பெண் தோழி முன்பாக ஹீரோயிசம் காட்டச்சென்ற இளைஞர்கள் முகம் சிதைந்து உயிரிழந்த பரிதாபம்

By Velmurugan sFirst Published Jun 17, 2023, 2:50 PM IST
Highlights

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே ஆள் நமாட்டம் இல்லாத அருவிக்கு தோழியுடன் குளிக்கச்சென்ற 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம்  தம்மம்பட்டி  அருகே  உள்ள  பச்சமலையில் மங்களம் அருவி  உள்ளது. இந்த அருமையானது திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள துறையூர் வன சரகத்திற்கு உட்பட்டதாகும் கோடை  காலத்தில் நீரோட்டம் குறைந்ததால் இந்த அருவியில் குளிக்கவும், அங்கு  செல்லவும்  சுற்றுலா பயணிகளுக்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டியைச்  சேர்ந்த  தமீம்(23), ஜெஸ்வந்த் (23), நிசாந்த் (24) இவர்களுக்கு, முசிறி தா.பேட்டையைச்  சேர்ந்த  குமரவேல்  மகள்  ஆர்த்தி(23) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம்  மூலம்  நட்பு  ஏற்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, ஊட்டியில் இருந்து நேற்று  தா.பேட்டைக்கு காரில் சென்ற 3பேரும், ஆர்த்தியை அழைத்து கொண்டு பச்சமலையில் உள்ள மங்களம் அருவிக்கு  தடையை மீறி குளிக்கச்  சென்றுள்ளனர். அப்போது  அருவிக்கு  செல்லும்  பாதையில்  உள்ள தடைகளை  அகற்றிவிட்டு குளிக்கச்  சென்றதாக கூறப்படுகிறது.

தண்ணீருக்கு பதிலாக ஸ்பிரிட்டை குடிக்க கொடுத்த தாய்; பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

இந்நிலையில் மங்களம்  அருவியின்  தண்ணீர்  விழும்  தடாகத்தில் தேங்கியிருந்த  தண்ணீரின்  ஆழம்  தெரியாமல் அவர்கள்  குளிப்பதற்காக அருவியையொட்டி உள்ள  பகுதியில் இருந்து  குதித்தாகத்  தெரிகிறது. அப்போது, தமீம், ஜெஸ்வந்த்  இருவரும்  தண்ணீருக்குள்  இருந்த  பாறையில் மோதியுள்ளனர். நீச்சல்  தெரியாததால்  இருவரும்  நீருக்குள்  மூழ்கத் தொடங்கினர். இதைக் கண்டு  அதிர்ச்சியடைந்த  நிசாந்த்  அவர்களைக்  காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது  நிசாந்தும்  தண்ணீரில்  மூழ்கினார். அவர்களுடன் வந்த  இன்ஸ்ட்கிராம் தோழி ஆர்த்தி  நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். 

பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடிக்கு கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் டும் டும் டும்

சத்தம்  கேட்டு  அப்பகுதியில்  இருந்த  மலைவாழ் இளைஞர்கள்  விரைந்து  வந்து  தண்ணீரில்  மூழ்கியவர்களை  மீட்டனர். இதில் தமீம், ஜெஸ்வந்த்  ஆகிய இருவரும்  மூச்சுத்  திணறி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய நிசாந்த்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு ஆர்த்தியுடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு  சென்ற தம்மம்பட்டி காவல் துறையினர் இறந்தவர்களின்  உடல்களை மீட்டு  பிரேதப் பரிசோதனைக்காக  ஆத்தூர்  அரசு  மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து தமீம் மற்றும் ஜெஸ்டின் உறவினர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். அப்போது உடற்கூறாய்வு செய்ய தாமதம் ஏற்படுவதாக கூறி ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்களை அரசு மருத்துவமனை முன்பு சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்தூர் பிரதான சாலையான கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை கூட அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

click me!