பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்காக ஆட்சியர் அலுவலகத்தை அலறவிட்ட மாணவர்கள்

By Velmurugan sFirst Published Sep 22, 2023, 12:47 PM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொய் குற்றச்சாட்டில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் இருவரையும் அதே பள்ளியில் பணி செய்ய அனுமதிக்குமாறு அரசுப்பள்ளி மாணவாகள் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் வேளாண்மை ஆசிரியர் சிவக்குமார் மற்றும் கணினி அறிவியல் ஆசிரியர் பாலச்சந்தர் ஆகிய இருவரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களை மீண்டும் தங்கள் பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தியும் அந்த பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இன்று பள்ளி தேர்வை புறக்கணித்து விட்டு வந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

காவிரி விவகாரம்; 26ம் தேதி தஞ்சையில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் - மணியரசன் அறிவிப்பு

அப்போது தங்கள் பள்ளியில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களை சிலர் ஜாதி, மதம் பாகுபாடு என பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அவர்களை பணியிட மாற்றம் செய்து விட்டதாகவும், 15 ஆண்டுகளாக தங்கள் பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்களும் மீண்டும் தங்கள் பள்ளியிலேயே பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும். இல்லை எனில் தங்களை அவர்கள் வேலை பார்க்கும் பள்ளியில் படிக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் அரங்கசாமி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் ஏற்கனவே டிசி வழங்கும் போது 100 ரூபாய் கட்டாய கட்டணம் மாணவர்களிடம் வசூல் செய்ததாகவும் அதனை இரண்டு ஆசிரியர்களும் தட்டி கேட்டதால் அவர்களை பணியிட மாற்றம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி இரவு நேரத்தில் இருக்க வேண்டிய காவலர் மதியழகன் என்பவர் பகலிலும் வந்து மாணவிகளிடம் தவறான எண்ணத்தில் பழகுவதாகவும் ஏற்கனவே அவர் ஒரு பிளஸ் டூ மாணவியை அழைத்து வந்து திருமணம் செய்தவர் என்பதால் தங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. 

பென்னாகரம் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவு? மாணவர்கள் அதிர்ச்சி

பள்ளியில் உண்மையில் தவறு செய்த தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் 15 ஆண்டுகளாக தங்களுக்கு நல்ல முறையில் பாடம் நடத்திய இரண்டு ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது வேதனை அளிக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்வை புறக்கணித்துவிட்டு மனு அளிக்க வந்துள்ளோம். சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்களையும் மீண்டும் பணியில் அமர்த்துவதோடு தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்யும் வரை  மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுத மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

click me!