குன்னூர் அருகே கிராம மக்களை 2 மாதங்களாக தூங்கவிடாமல் செய்த கரடி பிடிபட்டது; மக்கள் நிம்மதி

By Velmurugan sFirst Published Aug 22, 2023, 9:11 PM IST
Highlights

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் அட்டகாசம் செய்து வந்த கரடி வனத்துறை வைத்த கூண்டில் இன்று அதிகாலையில் சிக்கியது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள சேலாஸ் மற்றும் மேல் பாரதிநகர் இரட்டை வீடு பகுதிகளில் கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் கரடி ஒன்று பகல் மற்றும் இரவு வேளைகளில் சுற்றி திரிந்தது. மேலும் இரவு வேளையில் மேல் பாரதி நகர் இரட்டைவீடு பகுதியில் பல வீடுகளின் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்து வந்தது.

இந்நிலையில் ஊர் பொதுமக்கள் வனத்துறையினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் கடந்த ஜூலை 31ம் தேதி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திடம் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று மனு ஒன்றினை அளித்தனர்.

புஷ்பா பட பாணியில் லாரியில் ரகசிய அறை; 600 கிலோ கஞ்சா கடத்திய மத போதகர் உள்பட 3 பேர் கைது

இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கௌதம் சென்னையில் உள்ள முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆகியோரிடம் கரடியை கூண்டு வைத்து பிடிக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பி அனுமதி பெற்ற பின் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மேல் பாரதி நகர் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர்.

இந்நிலையில் 15 நாட்கள் நிறைவடையும் நிலையில் இன்று அதிகாலை கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து வனச்சரகர் சீனிவாசன் மற்றும் வனவர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் பிடிபட்ட கரடியினை அடர்ந்த வனப்பகுதியில் விட வாகனம் மூலம் எடுத்துச் சென்றனர். இதனால் மேல் பாரதி நகர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

சபாநாயகருடன் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடும் வாக்குவாதம்; புதுவையில் பரபரப்பு

மேலும் பிடிபட்ட கரடியை அதிகாலை வேளையில் காண வந்த அப்பகுதி  பகுதி பொதுமக்கள் மீண்டும் ஒரு கரடியினை நேரில் கண்டதால் வனத்துறையினரிடம் மீண்டும் கூண்டை இதே பகுதியில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!