454 கிலோமீட்டர்.. தொழிலாளர்களுடன் நடந்தே வந்த தமிழக வாலிபர்..! சுருண்டு விழுந்து பரிதாப பலி..!

By Manikandan S R SFirst Published Apr 3, 2020, 11:12 AM IST
Highlights

தொடர்ந்து வெயிலில் நடந்து வந்ததால் கடும் சோர்வடைந்து இருந்த லோகேஷ் அங்கிருக்கும் தொழிலாளர்களுடன் அமர்ந்திருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவர்கள் மூலமாக  பரிசோதனை செய்தனர். அதில் அவர் மரணமடைந்தது தெரியவந்தது.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கடைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்க அரசு அறிவுறுத்தி இருக்கிறது. ஊரடங்கு காரணமாக அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு மக்கள் வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலைக்காக வெளிமாநிலங்களில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் தங்கும் இடம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சனைகளால் சொந்த ஊரை நோக்கி நடந்து செல்லும் அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு நடந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

அதேபோல மஹாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த இளைஞர் ஒருவர் கடும் வெயில் காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ் பால சுப்பிரமணியன். 21 வயது இளைஞரான இவர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு காரணமாக போக்குவரத்து எதுவும் இல்லாததால் அங்கிருந்து 26 தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து தமிழகம் நோக்கி நடைபயணமாக வரத் தொடங்கியுள்ளனர். லோகேஷும் அவர்களுடன் சேர்ந்து நடந்து வந்துள்ளார். நாக்பூரில் இருந்து நாமக்கல்லுக்கு சுமார் 454 கிலோமீட்டர் தூரம் இருக்கும் நிலையில் கடுமையான வெயிலில் மூன்று நாட்களாக லோகேஷ் நடந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே வந்த தொழிலாளர்கள் அங்கு இருக்கும் சமுதாய நலக் கூடத்தில் இரவு தங்கினர். தொடர்ந்து வெயிலில் நடந்து வந்ததால் கடும் சோர்வடைந்து இருந்த லோகேஷ் அங்கிருக்கும் தொழிலாளர்களுடன் அமர்ந்திருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவர்கள் மூலமாக பரிசோதனை செய்தனர். அதில் அவர் மரணமடைந்தது தெரியவந்தது.

இதனால் அங்கிருந்து அனைத்து தொழிலாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அளித்தனர். பின் லோகேஷின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக நாமக்கல்லுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

click me!