திருட வந்த இடத்தில் திருடனுக்கு நேர்ந்த சோகம்.. தடுமாறியதால் ஏற்பட்ட விபரீதம்!!

By Asianet TamilFirst Published Sep 5, 2019, 12:55 PM IST
Highlights

மயிலாடுதுறை அருகே திருட சென்ற போது வீட்டு மாடியில் இருந்து கொள்ளையன் ஒருவன் தவறி விழுந்து பலியான சம்பவம் நடந்திருக்கிறது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சித்தர்காடு என்கிற பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாண்ட் மணி என்கிற மணிகண்டன். இவர் பல்வேறு இடங்களில் திருடுவதை தொழிலாக வைத்திருந்திருக்கிறார். இரவு நேரங்களில் பல வீடுகளில் ஏறி குதித்து திருடி இருக்கிறார். இதனால் இவர் மீது பல கொள்ளை சம்பவங்களில் வழக்குகள் இருக்கின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் இருக்கும் காமராஜர் நகரில் இருக்கும் ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்திருக்கிறார். அந்த வீட்டை தொடர்ச்சியாக நோட்டமிட்ட அவர்,நேற்று இரவு அங்கு திருட சென்றிருக்கிறார். இதற்காக ராஜலக்ஷ்மி என்பவற்றின் வீட்டு மாடியில் இருந்து இன்னோரு வீட்டின் மாடிக்கு தாவி குதித்திருக்கிறார்.

அப்போது நிலைதடுமாறிய மணி தவறி கீழே விழுந்துள்ளார். 15 அடி உயரமுள்ள வீட்டின் மாடியில் இருந்து விழுந்ததால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சத்தம் கேட்டு வெளியே வந்த வீட்டின் உரிமையாளர்கள், ரத்த வெள்ளத்தில் ஒருவர் பலியாகிக்கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, இறந்து கிடந்த மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டன் மீது ஏற்கனவே கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையடிக்க சென்ற இடத்தில உயிரை விட்ட திருடனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!