நாகையில் கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை

By SG BalanFirst Published May 1, 2023, 12:09 PM IST
Highlights

நாகையில் இந்திய கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 2015 முதல் கடற்படையில் பணியாற்றியவர்.

நாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமைச் சேர்ந்த வீரர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

நாகையில் இந்திய கடற்படை முகாம் அலுவலகம் ஆரியநாட்டு தெருவில் உள்ளது. இந்தக் கடற்படை முகாமைச் சேர்ந்த வீரர்கள் அலுவலக வாயிலில், சுழற்சி முறையில் இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் முகாம் அலுவலக வாசலில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் ராஜேஷ்.

இவர் நேற்று (ஞாயிறு) அதிகாலை 3 மணியளவில் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் சுட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டு தூங்கிகொண்டிருந்த மற்ற வீரா்கள், வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது, ராஜேஷ் தன் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடப்பதைக் கண்டிருக்கிறார்கள்.

நாகையில் கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை

ராஜேஷ் இறந்து கிடப்பது குறித்து மற்ற வீரர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், நாகை நகர காவல் நிலையத்திற்கும் இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் துணைக் காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி, காவல் ஆய்வாளர் சுப்பிரியா ஆகியோர் சம்பவ நடந்த கடற்படை முகாம் அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணைக்குப் பின் போலீசார் இறந்த வீரர் ராஜேஷின் உடலை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ராஜேஷ் திடீர் மரணம் தொடர்பாக கடற்படை சார்பிலும் விசாரணை நடத்தப்படுகிறது.

இறந்த கடற்படை வீரர் ராஜேஷ் வேலூர் மாவட்டம், காட்பாடியில் கே.வி. குப்பத்தைச் சேர்ந்தவர். 2015ஆம் ஆண்டு இந்திய கடற்படை பணியில் சேர்ந்த இவர் 2021 ஏப்ரல் 20ஆம் தேதி முதல் நாகை கடற்படைப் பிரிவில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்! கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

click me!