
கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மயிலாடுதுறையை சேர்ந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் முத்து. இவர் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா (45). இவர், சீர்காழி கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 12-ம் தேதி மீனாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
எனவே குணமடைந்து வீடு திரும்பிய 6 நாட்களுக்கு பின்பு மீனாவுக்கு இடது கண்ணில் பார்வை குறைபாட்டுடன் வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த 14ம் தேதி அவரது இடது கண் அகற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தொடர் சிகிச்சை அளிக்க அரசு உதவி செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மீனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.