கலைஞர் நூலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஷிவ் நாடார், ரோஷிணி - ஏன்? விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

By Raghupati RFirst Published Jul 15, 2023, 8:55 PM IST
Highlights

கலைஞர் நூலகத் திறப்பு விழாவில் ஹெச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் ரோஷினி கலந்து கொண்டனர்.

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரையில் சிறப்புமிக்க நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பொதுப்பணி துறையின் சார்பில் மதுரை புது நத்தம் சாலையில் 2.7 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2 லட்சம் சதுர அடியில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டது. இதனை இன்று திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.

இந்த விழாவில் ஹெச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ்நாடார், சாலமன் பாப்பையா, திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். அமைச்சர்கள்,  எம். பிக்கள், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் என பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் ரோஷினி நாடார் ஆகியோரது பெயர்கள் இருந்தது.

அவர்கள் ஏன் கலந்து கொள்கிறார்கள்? அவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வியை எழுப்பினர். இந்த நிலையில் தனது உரையின் போது முதல்வர் ஸ்டாலின் அதற்கு விளக்கமளித்தார். இதுபற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஷிவ் நாடாரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறோம். பெரிதாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்துகொள்ள மாட்டார்.

ஆனால், இவரையும், இவரது மகள் ரோஷினியையும் மாணவ, மாணவியர்களான நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகதான் நான் அழைத்துக் கொண்டு வந்திருக்கின்றேன். மிகப்பெரிய தொழில் அதிபர் என்று சொல்வது மட்டுமல்ல, அவருடைய பெருமை. இந்திய தொழிலதிபர்களில் அதிகமான தொகைளை நன்கொடையாக வழங்கக் கூடியவர் என்று பாராட்டப்படக்கூடியவர் அவர்.

“உனக்கு பணம் வரும்போது அதிகப்படியானவர்களுக்கு உதவி செய்ய” வேண்டும் என்று இவருடைய தாயார் சொன்னார்களாம். அதற்காகவே அறக்கட்டளை தொடங்கியவர் இவர். 50 நாடுகளில் கிட்டத்தட்ட 2 இலட்சம் பேர் வேலை பார்க்கின்ற அளவுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தினுடைய நிறுவனரான இவரும் உங்களைபோல அரசுப் பள்ளியில் படித்தவர்தான். பல கிராமங்களைத் தத்தெடுத்து உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு கிராமத்தில் பிறந்து, மாநகராட்சி பள்ளியில் படித்து, மிகச்சிறிய நிறுவனத்தை சொந்த முயற்சியால் தொடங்கி, இன்றைக்கு இவ்வளவு பெரிய மனிதராக அவர் உயர்ந்திருக்கிறார். இப்படிப்பட்டவரை உங்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தத்தான் இன்றைக்கு சிறப்பு அழைப்பாளராக அவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.

வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்

அவருடைய மகள் ரோஷினி, அந்த நிறுவனத்தினுடைய இயக்குநராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பெண்கள் அனைத்துப் பொறுப்புகளிலும் இறங்கிப் பணியாற்ற வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கனவு நிறைவேறும் காட்சியினுடைய அடையாளமாகவும், இவர்கள் இருவரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் முதலில் உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய நன்றி என்று கூறி விளக்கமளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரைக்கும், குழந்தைகள் – மாணவர்கள் - போட்டித் தேர்வர்கள் – மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் ஆறு தளங்கள் - மூன்று லட்சம் புத்தகங்களைப் பெற்றிருக்கக்கூடிய இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க தலைவர் கலைஞரே சிலை வடிவமாக இங்கே காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. தரமான கல்வி வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்துப் பணிகளையும் செய்து கொண்டு இருக்கிறோம்” என்று பேசினார்.

Rajinikanth : ஜூலை 13 ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு முக்கியமான நாள் தெரியுமா?

ஒரு நாள் போதும் முதல்வரே.. முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்.! இதை எதிர்பார்க்கல !!

click me!