கலைஞர் நூலகம்: ஜெயக்குமாருக்கு காழ்புணர்ச்சி - சு.வெங்கடேசன் எம்.பி., சாடல்!

By Manikanda PrabuFirst Published Jul 19, 2023, 1:22 PM IST
Highlights

கலைஞர் நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயரை வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காழ்புணர்ச்சி காரணமாக பேசுகிறார் சு.வெங்கடேசன் எம்.பி. சாடியுள்ளார்

மதுரை ரயில் நிலையம் முன் 1999ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் 3 டன் எடை கொண்ட மீன் சின்னத்தின் சிலை வைக்கப்பட்டு இருந்தது. 2019ஆம் ஆண்டு ரயில் நிலைய கட்டுமான பணிகளுக்காக மீன்கள் சிலை அகற்றப்பட்டது, அகற்றப்பட்ட மீன் சின்னங்கள் சிலையை எங்கே வைப்பது என ஆலோசித்து முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, பாண்டிய மன்னர்களின் சின்னமாக திகழ்ந்த மீன் சின்னம் சிலையை எங்கே வைப்பது என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் ஆலோசனை நடத்தினார்கள். குழுவின் தலைவர் மூத்த வழக்கறிஞர் காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்.வசந்த், மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் கே.ராஜு, ராஜன் செல்லப்பா, தளபதி ஆகியோரும் காவல்துறை, மாநகராட்சி, ரயில்வேத்துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் பலம் ஒரு பார்வை!

கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “மீன் சின்னம் பாண்டிய மன்னர்களின் சின்னம். சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்ட சின்னம். மதுரை மாநகராட்சிக்குள் பொருத்தமான இடத்தில் மீன் சின்னத்தை நிறுவ ஆலோசிக்கப்பட்டது. 3 இடங்களை ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க உள்ளோம். ரயில்வே நிர்வாகம் மத ரீதியான சின்னங்களை வைக்க அனுமதி மறுக்கிறார்கள். ஆனால், தனித்த அடையாளமாக உள்ள மீன் சின்னத்தையும் வைக்க மறுக்கிறார்கள்.” என குற்றம் சாட்டினார்.

மதுரை ரயில் நிலையத்தில் புதிய கட்டுமானம் அமைய உள்ளதாக குறிப்பிட்ட சு.வெங்கடேசன் எம்.பி., அக்கட்டடத்தில் மதுரையின் அடையாளமான மீன் சின்னத்தை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

கலைஞர் நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயரை வைக்க வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன் எம்.பி., “கன்னியாகுமரியில் 10 ஆண்டுகளாக திருவள்ளூர் சிலையை பராமரிக்காமல் இருந்தது அனைவருக்கும் தெரியும். நூலகத்திற்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்.” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நீதிமன்றம் தலையிட்டு பாரமரிப்பு பணிகளை செய்ய வைத்ததது. அதிமுக ஆட்சி காலத்தில் 2016 ஆம் ஆண்டில் மதுரையில் 6 கோடி மதிப்பில் நூலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்படி நூலகத்தை கட்டி திருவள்ளூர் பெயரை வைத்து இருக்கலாம். கலைஞர் நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயரை வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காழ்புணர்ச்சி காரணமாக பேசி இருக்கிறார்.” எனவும் சு.வெங்கடேசன் எம்.பி சாடினார்.

click me!