அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்..நீதியை நிலைநாட்ட எந்த எல்லைக்கும் செல்வோம்.. உயர்நீதிமன்றம் கருத்து..

By Thanalakshmi VFirst Published Mar 12, 2022, 4:44 PM IST
Highlights

கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் வருவது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய நீதிபதி நீதியை நிலைநாட்ட நீதிமன்றம் எந்த எல்லைக்கும் செல்லும் என்று தெரிவித்துள்ளார். 
 

மதுரை முனிச்சாலை ஜெயா ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் ஜோசப் ஜெயசீலன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தங்கள் பள்ளி ஆசிரியைகள் இருவர் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரியிருந்தார்.

மேலும் படிக்க: மாணவர்கள் கவனத்திற்கு..! புதுச்சேரி பல்கலை.யில் ph.D.படிப்பு மாணவர் சேர்க்கை குறித்து முக்கிய அப்டேட்..

இந்த மனு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு குறித்து அரசு தரப்பில் ‘இரு ஆசிரியைகளுக்கும் மனுதாரர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாக அவர்கள் புகார் அளித்தன் அடிப்படையில் இடமாறுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. மேலும் அப்பள்ளியில் நியமனம் செய்யப்படும் பெண் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் மனுதாரர் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளதாகவும் அரசு தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதனிடையே நீதிமன்றத்தில் இரு ஆசிரியைகளும் மனுதாரரின் பாலியல் தொந்தரவு தொடர்பாக தனி மனு தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தனர். பின்னர், வழக்கு குறித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதில் இந்த வழக்கில் மனுதாரர் சம்பந்தப்பட்ட இரு ஆசிரியைகளையும் பள்ளியின் நடைமுறை பாதிக்காதவாறு பணியமர்த்த கோராமல், இருவரின் பணிமாறுதல் உத்தரவையும் ரத்து செய்யுமாறு கோரியதுடன், இரு ஆசிரியைகளையும் வழக்கில் எதிர் மனுதாரராகவும் சேர்த்துள்ளார். எந்த அடிப்படையில் மனுதாரர் இவ்வாறு செய்தார் என்ற கேள்வி எழுகிறது. மேலும் பள்ளிகளில் இதுபோன்ற செயல்பாடுகளை நீதிமன்றம் பொறுத்துக் கொள்ளாது. கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், பாலியல் தொல்லை தருவோர் தப்பி வருகின்றனர். நீதியை நிலைநாட்ட நீதிமன்றம் எந்த எல்லைக்கும் செல்லும் என்று நீதிபதி கூறினார்.

மேலும் படிக்க: இனி யாரும் தப்ப முடியாது..திட்டமிட்டு சாதி- மத மோதல்..கூண்டோடு தூக்க ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..

மனுதாரரால் பாதிக்கப்பட்ட 2 பெண் ஆசிரியைகளும், கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய புகார் அடிப்படையில், கீரைத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆசிரியைகள் இருவரும் இடமாறுதல் செய்யப்பட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும் எனவும் இருவரின் பணி பதிவேடுகளையும் வழக்கு முடியும் வரை கல்வி அலுவலர் தனது பொறுப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். பெண் ஆசிரியைகளுக்கும் எதிரான பாலியல் புகார்களை விசாரிக்க, மாவட்ட கல்வி அலுவலர் தனிக் குழுவை அமைக்க வேண்டும் எனவும் கீரைத்துறை போலீஸார் விசாரணை அறிக்கையை மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் 
நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும் படிக்க: India Corona: 2 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த கொரோனா..இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3,614..

click me!