கைதிகளுக்கு கை காப்பு போட்ட காவல் நிலையத்தில் கர்ப்பிணிக்கு வளைகாப்பு!

By Manikanda PrabuFirst Published May 30, 2024, 7:59 PM IST
Highlights

காவல் நிலையத்தில் கணினி ஆப்ரேட்டராக வேலை பார்க்கும் கர்ப்பிணி பெண்ணுக்கு கள்ளிக்குடி காவல் நிலையத்தில் காவலர்களால் வளைகாப்பு நடத்தப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை திருமங்கலம் அருகே கள்ளிக்குடி காவல் நிலையத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றும் பெண்ணுக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றாக சேர்ந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி காவல் நிலையத்தில் கணினி ஆபரேட்டராகவும் வரவேற்பாளராகவும் பணிபுரிந்து வருபவர் ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் ஜோதிகரன் - மல்லிகா தம்பதியினரின் மகள் சங்கீதா. இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்திருமணம் நடைபெற்றது. சங்கீதாவின் கணவர் மதுரையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சங்கீதாவின் தந்தை ஜோதிகரன் சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கீதாவின் தாய் மல்லிகாவும் உடல் நல குறைவால்  உயிரிழந்தார்.

Latest Videos

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!

இந்நிலையில் சங்கீதா கர்ப்பம் அடைந்தார். பெற்றோர் இல்லாத அவருக்கு கள்ளிக்குடி காவல் நிலைய காவலர்கள் அனைவரும் உறுதுணையாக உள்ளனர். அவருக்கு வேண்டிய உதவிகளை அவ்வப்போது செய்து கொடுத்து வந்த நிலையில் 7 மாத கர்ப்பிணியான சங்கீதாவிற்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்து மாவட்ட எஸ்பியின் அனுமதி பெற்று நேற்று கள்ளிக்குடி காவல் நிலையத்தில் வைத்து கணவர் ராஜபிரபுவையும் சங்கீதாவையும் நாற்காலியில் அமர வைத்து சீர்வரிசை பொருட்களுடன் வளையல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் அனைவரும் வாங்கி வந்து காவல் நிலைய வளாகத்திற்குள் வைத்து சங்கீதாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

இருவருக்கும் மாலை அணிவித்து கள்ளிக்குடி காவல் ஆய்வாளர் லட்சுமி லதா தலைமையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சார்பு ஆய்வாளர் மணிமொழி மற்றும் காவலர்கள் அனைவரும் சங்கீதாவிற்கு வளையல் அணிந்து தாய்க்கு தாயாகவும், சகோதரியாகவும் சகோதரனாகவும், தாய் மாமனாகவும் இருந்து சடங்கு சம்பிரதாயங்களை நடத்தி அறுசுவை உணவு ஏற்பாடு செய்து அனைவருக்கும் வழங்கி கொண்டாடினர். பல கைதிகளுக்கு கைகாப்பு போட்ட காவல் நிலையத்தில் பணியாற்றும் கணினி ஆப்பரேட்டர் பெண்ணுக்கு உடன் பணி புரியும் காவலர்கள் மூலம் வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!