
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றத்தால் கடல் அரிப்பும் ஏற்படுகிறது.
தற்போது கால நிலை மாற்றத்தால் அவ்வப்போது பலத்த காற்றுடன் கடல் சீற்றம் காணப்படும் நிலையில், அடிக்கடி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வந்த நிலையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இன்றும் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீனவ கிராமங்களை சேர்ந்த 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 2-வது நாளாக இன்றும் மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.