கந்துவட்டி கொடுமை... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..!

By vinoth kumarFirst Published May 18, 2019, 4:05 PM IST
Highlights

நாகர்கோவிலில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாகர்கோவிலில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நாகர்கோவில் வஞ்சிமார்த்தாண்டன் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவர் வடசேரியில் சிகரெட், பிஸ்கட் போன்றவை மொத்த வியாபாரம் செய்யும் ஏஜென்சீஸ் நடத்தி வந்தார். இவரது வீட்டில் சுப்பிரமணி, அவரது தாயார் ருக்மணி (72), மனைவி ஹேமா (48), மகள் ஷிவானி (20) ஆகியோர் வசித்து வந்தனர். வழக்காக தினமும் காலையில் சுப்பிரமணி கடையை திறந்து வியாபாரத்தை தொடங்கிவிடுவார். ஆனால் இன்று காலை நீண்டநேரமாகியும் கடையை திறக்க செல்லவில்லை. 

இதனால் கடையில் வேலைபார்க்கும் ஊழியர் பலமுறை போன் செய்துள்ளார். யாரும் போனை எடுக்காததால் ஊழியர்கள் அவரது வீட்டிற்குச் சென்றார்கள். இதனையடுத்து வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பின்னர் இதுதொடர்பாக உறவினர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு வீட்டு படுக்கையறையில் சுப்பிரமணி, ருக்மணி, ஹேமா, ஷிவானி ஆகிய 4 பேரும் வாயில் நுரைதள்ளியபடி இறந்துகிடந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருந்தது தெரியவந்தது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சுப்பிரமணி கந்துவட்டிக்குப் பணம் வாங்கியிருப்பதாகவும், கடன் அதிகரித்ததால் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்பிரமணியின் மகள் ஷிவானி, ஹோமியோ டாக்டருக்கு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!