Padappai Guna : திடீரென தூக்கியடிக்கப்பட்ட 40 காவலர்கள்.. ரவுடி படப்பை குணாவுக்கு உதவியது தான் காரணமா?

By vinoth kumarFirst Published Jan 15, 2022, 7:35 AM IST
Highlights

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வருகிறது.

பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு உதவி செய்ததாக 3 காவல் ஆய்வாளர்கள், 4 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 40 காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது தலைமறைவாகியுள்ள குணாவை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், படப்பை குணா தலைமறைவாக இருந்த நிலையில் அவரது மனைவி எல்லம்மாளை கடந்த 9-ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தினர்.இதனிடையே, குணாவின் மனைவி எல்லாம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அதில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சுயேட்சையாக எனது கணவர் வெற்றி பெற்றது முதல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மூலம் மிரட்டல்கள் வருகிறது. நிலுவையில் உள்ள வழக்குகளில் தனது கணவர் சரணடைய தயாராக உள்ள நிலையில், புறநகர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரியால் என்கவுன்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, தனது கணவர் குணாவை என்கவுன்டர் செய்யக்கூடாது என அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘குணாவை என்கவுண்டர் செய்யும் திட்டம் இல்லை. அவர் சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், படப்பை குணாவுக்கு உதவி செய்ததாக மூன்று காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக இதுவரை 40 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த 40 காவலர்களும் சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

click me!