மார்டன் மாமி யூடியூப் சேனல் மூலம் ரூ.1.5 கோடி மோசடி செய்த கோவை பெண் உள்பட 3 பேர் கைது

By SG BalanFirst Published Jun 6, 2023, 8:42 AM IST
Highlights

1.5 லட்சம் பேர் பின்தொடரும் யூடியூப் சேனல் நடத்திவந்த ஹேமலதா நூற்றுக்கு மேற்பட்டவர்களிடம் மோசடி செய்து 1.5 கோடி ரூபாயைச் சுருட்டி இருக்கிறார்.

கோவையை சேர்ந்தவர் ஹேமலதா மாடர்ன் மாமி என்ற யூட்யூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் வீட்டு உபயோகப் பொருட்கள் குறித்து ரெவ்யூ வழங்கி வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த சேனலை 1.5 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

அண்மையில் ஹேமலதா தன் சேனலின் ஃபாலோயர்களிடம் ரூ.1200 முதலீடு செய்தால், 20 நாட்களில் ரூ.1500 தருவதாகக் கூறி விளம்பரம் செய்தார். இதன் மூலம் 20 நாட்களில் ரூ.300 லாபம் கிடைக்கும் என்று சொன்னதால் அதை நம்பி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மொத்தம் 1.5 கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.

20 நாட்களுக்குப் பிறகு ஹேமலதா பேசியபடி பணத்தைக் கொடுக்கவில்லை. தனது பணம் கிடைக்காததால் ரமா என்பவர் மே 29ஆம் தேதி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். ஹேமலதாவிடம் ரூ.1.38 லட்சம் முதலீடு செய்தது ஏமாற்றம் அடைந்ததாக தனது புகாரில் கூறியிருக்கிறார்.

இதனை அறிந்த ஹேமலதா, அவரது கணவர் ரமேஷ், மற்றும் மார்டன் மாமி யூடியூப் சேனல் கேமராமேன் அருணாசலம் ஆகியோர் தலைமறைவாகிவிட்டது. அவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்திவந்த காவல்துறையினர் விளாங்குறிச்சி அருகே இருந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 45 சவரன் தங்கம், 1.75 கிலோ வெள்ளி, 7 மொபைல் போன்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பல பொருட்களை பறிமுதல் செய்தனர். கைதான மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

click me!