அதிமுக + தேமுதிக + பாமக = பாஜக கூட்டணி.. வானதி சீனிவாசன் சொன்ன கூட்டணி கணக்கு.. இது லிஸ்ட்லயே இல்ல..

By Raghupati RFirst Published Feb 25, 2024, 9:28 PM IST
Highlights

"மழைவெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு உடனடியாக   விடுவித்த தொகை 'பைசாக் கணக்கில்' சேராதா...?“ என்று கூறியுள்ளார் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.

குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை சென்னை நெசப்பாக்கத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள் மருந்தகம் மூலம் 1950 க்கும் மேற்பட்ட மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 10 ஆயிரத்து மேல் இந்த மருந்தகம் இந்தியா முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. 

பெரும்பாலும் பெண்கள், பட்டியலினத்தை சார்ந்தவர்களுக்கு இந்த மருந்தகத்தை நடத்த உரிமம் வழங்கப்படுகிறது. மனதின் குரல் மூலம் பெண்களுக்கு உற்சாகமும் , தன்னம்பிக்கையும் கிடைக்கிறது. முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் இந்த முறை இதுவரை இல்லாத அளவு அதிக எண்ணிக்கையில் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என மனதின் குரலில் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். மாநகர பகுதியில் 50 சதவீதத்திற்கும் குறைவாக வாக்குகள் பதிவாவது இந்த முறை மாற வேண்டும். 

பிரதமர் நிகழ்வில் பங்கேற்க கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க மேலும் சில கட்சிகள்   பாஜகவை நோக்கி கூட்டணிக் வரும். மார்ச் மாத தொடக்கத்தில் பிரதமர் மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் தமிழகத்திற்கு வருகை தருவதால் கட்சியினருக்கு உற்சாகமும் , எழுச்சியும் கிடைக்கிறது. மத்திய குழு அறிக்கை அடிப்படையில்  மழை வெள்ள பாதிப்பிற்கு கிடைக்க வேண்டிய நிதி மத்திய அரசிடம் இருந்து கண்டிப்பாக தமிழகத்திற்கு கிடைக்கும். 

மழை வெள்ள பாதிப்பிற்கு ஒரு பைசா கூட மத்திய அரசு வழங்கவில்லை என்று முதலமைச்சர் கூறுவது தவறு. தமிழக அரசுக்கு தேவையான நிதியை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட உடனேயே மத்திய அரசு  கொடுத்துவிட்டது, அது பைசா கணக்கில் சேராதா..? என்று கேள்வி எழுப்பினார். சாதூரியம்  இருந்தால் சாதித்து  கொள்ளலாம் என்று நிதி அமைச்சர் நாளிதழ் பேட்டியில் கூறியதை மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை போல நிதி ஒதுகீட்டுடன் தொடர்புபடுத்தி திமுகவினர் கருத்து சொல்கின்றனர். 

நிதி அமைச்சர் சாதூரியம் என்று குறிப்பிட்டது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் , தமிழகம் அதனால் பாதிக்கப்படுவதை தடுக்க தமிழகத்தின் மனிதவளக் குறியீடு , பல்வேறு துறைகளில் தமிழகம்  முன்னேற்றம் அடைந்துள்ளது குறித்து நிதி கமிசனிடம் எடுத்துக் கூறி பரிகாரம் பெறலாம் என்பதை சுட்டிக் காட்டத்தான் அவ்வாறு கூறினார். 

தேமுதிக, பாமக, அதிமுக கூட்டணிக்கு சென்றால் எங்களுக்கு பாதகமா என்று கேட்கிறீர்கள். எந்த கட்சி எங்கே செல்கிறார்கள் என தேர்தல் நெருங்கும்போதுதான் தெரியும். நாடு முழுவதும் காங்கிரசில் இருந்து பல்வேறு தலைவர்கள் பாஜகவில்  இணைத்து வருகிறார்கள். சகோதரி விஜயதரணி சட்டமன்றத்தில்  நல்ல முறையில் வாதங்களை எடுத்து வைப்பதை நான் பார்த்திருக்கிறேன் .  தேசிய சிந்தனை உள்ள அவர் பாஜகவுக்கு வந்ததை வரவேற்கிறேன்” என்று கூறினார் வானதி சீனிவாசன்.

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

click me!