கோவையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை; பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சேவை பாதிப்பு

By Velmurugan sFirst Published Nov 9, 2023, 9:51 AM IST
Highlights

கோவையில் இரவு தொடங்கி தற்போது வரை பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் நிலையம், அவிநாசி சாலை மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு தொடங்கி தற்போது வரை பரவலாக தொடர் கன மழை பெய்து வருகிறது. காந்திபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், சிங்காநல்லூர், பீளமேடு, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு என அனைத்து பகுதிகளிலும் 10 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. குறிப்பாக கோவை ரயில் நிலையம் பகுதியில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து அதிக அளவில் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் மேம்பாலம் மற்றும் அவிநாசி சாலை, உப்பிலிபாளையம் மேம்பாலம் ஆகியவற்றின் அடியில் 80 சதவிகிதம் அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டு போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?தென் மாவட்டத்திற்கு சிறப்பு ரயில்-எந்த ரயில் நிலையத்தில் நிற்கும் தெரியுமா

இதே போல் லங்கா கார்னர் பாலம் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று பிரேக் பிடிக்காமல் அங்கிருந்த டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதை அடுத்து மாற்று ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதிலிருந்த நோயாளி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது மட்டுமின்றி வடவள்ளி அடுத்த பி.என்.புதூர் பகுதியில் வீடுகளுக்கும் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதே போல சின்னவேடம்பட்டி குப்புசாமி நகரிலும் சாக்கடை கால்வாய் ஒழுங்காக கட்டப்படாததால், மழைநீரோடு சாக்கடை நீரும் கலந்து வீட்டிற்குள் தேங்கி நிற்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கணுவாய் பன்னீர் மடை சாலையிலுள்ள ஓடையில்  பெருக்கெடுத்து வரும் நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் தேங்கி நிற்கும் நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு இரவு மழைக்கே பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

click me!