'கோவை ரைசிங்': கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

By Manikanda PrabuFirst Published Apr 16, 2024, 3:51 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வருகிற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தமிழ்நாட்டில் நாளை மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில், கோவை தொகுதிக்கு மட்டும் பிரத்யேகமாக தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது.

கோவை தொகுதி எப்போதுமே திமுகவுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கோவை, செந்தில் பாலாஜி வரவுக்கு பிறகு திமுக வசம் சென்றது. இந்த தேர்தலில் செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு பெரு வெற்றியை தேடித் தருவார் என எதிர்பார்த்ததற்கு இடையே, அவர் சிறை சென்று விட்டார்.

இதையடுத்து, கோவையின் பொறுப்பு அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் திமுகவின் வெற்றிக்கான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரும் களத்தில் பம்பரமாக சுழன்று பணியாற்றி வரும் நிலையில், கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு ஏன் இல்லை: ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தமிழ்நாட்டில் நாளையுடன் முடிவடையும் நிலையில், 'கோவை ரைசிங்' என்ற தலைப்பில் இன்று கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. கோவை மக்களவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர்.

அதில், கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். ஏரிகளில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

click me!