மேட்டுப்பாளையம் தீண்டாமை சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு; நீதி கேட்டு பேரணி செல்ல முயன்றவர்கள் கைது!!

By Dhanalakshmi GFirst Published Dec 2, 2022, 5:51 PM IST
Highlights

மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி.காலனி பகுதியில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த தினத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு அனுமதியின்றி பேரணி நடத்த முயன்ற 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வந்தனர். அவர்களது  குடியிருப்பு பகுதியை ஒட்டி கட்டப்பட்டிருந்த சொகுசு பங்களா ஒன்றின் சுவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் மழை பெய்தபோது இடிந்து அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று  நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு இன்று அந்தப் பகுதியில் நினைவஞ்சலி செலுத்த கட்சியினருக்கும், அமைப்புகளுக்கும் தமிழக காவல் துறை தடை விதித்து இருந்தது. 

இந்த நிலையில் தடையை மீறி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தமிழ் புலிகள், திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்  தடையை மீறி நினைவஞ்சலி செலுத்த ஒன்று திரண்டனர். இதைத் தொடர்ந்து, 17 பேர் பலியான சம்பவத்திற்கு நீதி கேட்டும், சொகுசு பங்களாவின் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதியவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும், இதற்காக போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.  

அதிமுகவின் போராட்டம் சிரிப்பை வரவழைக்கிறது… அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்!!

கட்டுப்பாட்டையும் மீறி, கோஷம் எழுப்பியவாறே நினைவஞ்சலி செலுத்த மேட்டுப்பாளையம் கோவை சாலையில் பேரணி செல்ல முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். அப்போது, அஞ்சலி செலுத்த சென்றவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்று காவல் துறை வாகனத்தில் ஏற்றினர். பின்னர், இவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

இருதரப்பினர் இடையே அடிதடி… ஒரு தரப்புக்கு கத்தி குத்து.. சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!!

click me!